மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, சொந்தக்கட்சி உறுப்பினரிடமே ரூ.9 லட்சம் ஏமாற்றிய வழக்கில் விருதுநகர் பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவருக்கு ரயில்வேதுறையிலும், மற்றொருவருக்குக் கப்பல் துறைமுகத்திலும் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, கடந்த 2017-ல் 11 லட்ச ரூபாயை பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷும், செயலாளர் கலையரசன் என்பவரும் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால், கொடுத்த வாக்குறுதியின்படி பாண்டியன் மகன்களுக்கு மத்திய அரசு வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள். இதனால் விரக்தியடைந்த பாண்டியன், தன் மகனுக்கு அரசு வேலைகூட வாங்கித்தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தை மட்டும் என்னிடம் திருப்பிக் கொடுங்கள்’’ எனக் கேட்டிருக்கிறார். பலகட்ட புகார்களுக்குப் பிறகு, வி.கே.சுரேஷும் கலையரசனும் சேர்ந்து 2 லட்ச ரூபாயை மட்டும் பாண்டியனுக்கு திருப்பிக் கொடுத்திருக்கின்றனர். மீதிப்பணம் ரூ.9 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றிவந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், தன் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ், செயலாளராக இருக்கும் கலையரசன் ஆகியோர் தன்னிடம் 9 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி, முதற்கட்டமாக கலையரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த வி.கே.சுரேஷ், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தை அணுகி நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதன்படி முன்ஜாமீன் பெறுவதற்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமாகச் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தொகையைச் செலுத்தாமல் காலம்தாழ்த்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், நிபந்தனை முன்ஜாமீனுக்குப் பணம் செலுத்துவதற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த கெடு தேதி காலாவதியானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற வி.கே.சுரேஷ் முயன்றிருக்கிறார்.

ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே இந்த வழக்கில் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்திருக்கிறது. இந்த நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் காலாவதியானதைத் தொடர்ந்து வி.கே.சுரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்" எனத் தெரிவித்தனர்.