அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில், திங்கட்கிழமை காணாமல்போன இரண்டு சிறுமிகளைத் தேடும்போது, ஒக்கலஹாமா எனும் நகரின், ஹென்ரிட்டா பகுதியில் இறந்த நிலையில் இருந்த ஏழு உடல்களை போலீஸார் கண்டெடுத்திருக்கின்றனர். ஆனால், அவர்களை அடையாளம் காண இயலவில்லை. இது தொடர்பாக அமெரிக்காவின் செய்தி ஊடகம், ``காணாமல்போன இரண்டு சிறுமிகளும் முறையே 14, 16 வயது நிரம்பியவர்கள். கண்டெடுக்கப்பட்ட உடல்களில் இவர்களின் உடல்களும் இருக்கின்றனவா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும், அந்தச் சிறுமிகள் பாலியல் குற்றங்களைச் செய்யும் ஒருவருடன் கடைசியாக இருந்ததாகக் கூறப்படுகிறது'' எனத் தெரிவித்திருக்கிறது.
அந்த நாட்டு தலைமைச் சட்ட அமலாக்க அதிகாரியான ரைஸ் செய்தியாளர்களிடம் இது பற்றிப் பேசியபோது,” உடல்கள் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து, அந்தச் சிறுமிகளைத் தேடும் பணி கைவிடப்பட்டது. நாங்கள் தேடிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்ததாக உணர்கிறோம். சிறுமிகளின் வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

மேலும், அந்தச் சிறுமிகளின் உடல்கள் தேடப்பட்டுவரும் நிலையில், பாலியல் குற்றங்கள் செய்யும் நபரான ஜெஸ்ஸி எல்.எம்.சி ஃபேடன் என்பவருடைய இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்சாலைப் பகுதியின் ரோந்துப் படையினர் வெளியிட்ட அறிக்கையின்படி, “அந்த இரண்டு சிறுமிகளும் கடைசியாக அதிகாலை 1:22 மணியளவில் அந்த நபருடன் காரில் பயணித்திருக்கின்றனர். மேலும், அந்த நபர் குழந்தைகளைவைத்து ஆபாசப் படம் எடுத்தல், தன்னைவிட வயது குறைவானவர்களை பாலியல் வன்புணர்வு செய்தல் போன்ற குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி. இவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லியும், இவர் வராததால் இவரை உடனடியாகக் கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.