
மை விகடனில் ஆன்மிக கட்டுரைகள் எழுதி வருபவர் பழனிவேல். அமாவாசை நாள்களில் என்ன சடங்குகள் செய்ய வேண்டும்? கார்த்திகை தீபம் ஏன் வைக்கிறோம்?
விகடன் வாசகர்கள் பலரும் நம் நிருபர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு vikatan.com இணையதளத்தில் கலக்குகிறார்கள். ‘மை விகடன்’ பக்கத்தில் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் டாப் வாசகர்கள் சிலர் பற்றிய சிறு குறிப்புகள் இங்கே...
ஆதிரை வேணுகோபால்
80’ஸ் சினிமா கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பயணக் கட்டுரைகள் என எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கும் ஆல் ரவுண்டர்தான் சென்னையைச் சேர்ந்த ஆதிரை. `நான்கு தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் `எலுமிச்சை’ அழகு குறிப்புகள்’ என்னும் தலைப்பிட்ட அவரின் கட்டுரை சூப்பர் டூப்பர் ஹிட். இளையராஜா பாடல்களை ஸ்வரம், தாளம், சுருதி என அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ரசித்து இவர் எழுதிய கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் செம வரவேற்பு.
ஜி.ஷியாமளா கோபு
60களில் பள்ளி நாள்கள், மொபைல் போன் வருகைக்கு முன் போஸ்ட் கார்டில் தகவல் பரிமாறிக்கொண்ட தலைமுறையின் அனுபவங்கள் என பசுமையான நினைவுகளை மிக நேர்த்தியாக எழுதி வரும் 60ஸ் கிட் ஷியாமளா. எவர்சில்வர் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவை தொனியில் எழுதி வாசகர்களிடம் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார்.

திருமாளம் எஸ்.பழனிவேல்
மை விகடனில் ஆன்மிக கட்டுரைகள் எழுதி வருபவர் பழனிவேல். அமாவாசை நாள்களில் என்ன சடங்குகள் செய்ய வேண்டும்? கார்த்திகை தீபம் ஏன் வைக்கிறோம்? இறைத்தூதர் இப்ராஹிம் பற்றிய உருக்கமான கதை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றிய பகிர்வு என இறை நம்பிக்கை கொண்ட வாசகர்களுக்கு ஒருபக்கமும், 60ஸ், 70ஸ், 80ஸ் சினிமா குறித்த கட்டுரைகள் என திரை ரசிகர்களுக்கு இன்னொரு பக்கமுமாக இரட்டை ட்ரீட் வைப்பதில் வல்லவர்.
மரு உடலியங்கியல் பாலா
வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகளை இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் சுவாரஸ்யமான கதைகளாக `மை விகடன்’ வாயிலாக எழுதி வருகிறார் மருத்துவர் பாலசுப்ரமணியன். `பரோட்டா மாரியும், டாக்டர் ஊசீஸ்வரனும்', `டாக்டர் ஊசீஸ்வரனும் விசித்திர நோயாளியும்', `டாக்டர் ஊசீஸ்வரனிடம் புலம்பிய வயிறு' ஆகிய சிறுகதைகள் ஆரோக்கியமான உணவு முறையின் அவசியத்தை உணர்த்துபவை.
ஜூனியர் தேஜ்
உதவித் தலைமை ஆசிரியர் வரதராஜன், ஜூனியர் தேஜ் என்ற புனைப்பெயரில் எழுதும் மை விகடன் வாசகர். இவர் எழுதும் ‘கலியன் மதவு’ என்னும் சமூக நாவலுக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. பல தலைமுறைகளாக மயானத்துக்கு பாதையில்லாத பூர்வீக கிராமத்தில், தன் சொந்த நிலத்திலேயே பாதை போட்டு, கிராமப் பஞ்சாயத்துக்கு அர்ப்பணிக்க விழைந்த நிலக்கிழாரின் கனவை மெய்ப்பிக்க போராடி, வெற்றி பெறும் மனிதநேயம் மிக்க ‘ஏழைக் கூலி’ கலியனின் கதை தான் இந்த நாவல். இவரின் புத்தாண்டு `ஷெட்யூல்’, `பொழி’, `தீபாவளி பர்சேஸ்’ ஆகிய சிறுகதைகள் செம ஹிட்.
மலர்விழி மணியம்
பெண்ணியம் சார்ந்த சிறுகதைகளை மிகவும் இயல்பான தொனியில் எழுதுவதில் மலர்விழி கைதேர்ந்தவர். ``அம்மா ஏன் எப்பவும் ஆறிப்போன தோசை சாப்பிடணும்?’’, ``அம்மாக்கள் காதல் தோல்வி பற்றி பேசக் கூடாதா?’’ இப்படிப் பல கேள்விகளை சிறுகதைகள் வாயிலாக எழுப்பியவர். லவ் பிரேக் அப் ஆகி காதலி மீது கடுங்கோபத்தில் இருக்கும் மகன், அம்மாவின் கல்லூரி காலத்து காதல் தோல்வி கதையைக் கேட்டு எப்படி மனம் மாறுகிறான் என்பதை `காயங்கள் ஆற்றும் காலம்’ சிறுகதையில் உணர்வுபூர்வமாக விவரித்திருப்பார்.
நீங்களும் உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற தளத்துக்கு அனுப்பலாம், விகடன் வாசகராக மட்டுமன்றி, விகடன் எழுத்தாளராகவும் இனி கலக்கலாம்...