
வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்...

இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கமான தருணம்... இதோ!
சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டைதீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.
கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையிலிருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்து, வெற்றிப்பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் எனத் தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள்.
இதோ, இது உங்களுக்கான நேரம். இளமைக்கு ‘ஆ.வி.’, உண்மைக்கு ‘ஜூ.வி.’, பெண்மைக்கு ‘அவள்’, ஆன்மிகத்துக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூடியூபில் ஏராளமான சேனல்கள், சமூக ஊடங்களில் நிமிடத்தில் அப்டேட் என உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அற்புத வாய்ப்பு.
1.7.2005-க்கு முன்பு பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவியரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ - மாணவியர், தற்போது (2022 - 2023) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு
(2023 - 2024) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2022 - 2023-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.
இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.03.2023-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.
ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களமிறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!
- ஆசிரியர்
ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com
மொபைலில் விண்ணப்பிக்க உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.


விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:
(அ) நிருபர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் 7 தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உங்களது சொந்தக் கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும். இணையத்திலிருந்தோ, வேறு புத்தகத்திலிருந்தோ எடுத்து எழுதக் கூடாது. அப்படி எழுதியது கண்டறியப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
1 ஹீரோக்களுக்காகப் படம் பார்த்த காலம் மெல்ல மாற்றமடைந்து, இயக்குநர்களுக்கென்று தனி ரசிகர் படை உருவாகும் போக்கு தற்போது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
2 நான் ஒரு பத்திரிகையாளராக இருந்திருந்தால், எங்கள் ஊரில்/பகுதியில் இருக்கும் `இந்த’ சமூகப் பிரச்னை குறித்து எழுதியிருப்பேன்’ என நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம் குறித்துக் கட்டுரையாக எழுதுங்கள் (நிச்சயம் உங்கள் ஊர்/ மாவட்டம் சார்ந்ததாக இருக்க வேண்டும்).
3 சோஷியல் மீடியாவில் பல பெண்கள் கோலோச்சி வருகின்றனர். அந்த வரிசையில் உங்களுக்குப் பிடித்த பெண் Influencer-ஐ பற்றிக் கட்டுரையாக எழுதுங்கள்.
4 உங்கள் பகுதியில் மட்டுமே நடைபெறும் விசேஷத் திருவிழா அல்லது வழிபாடு குறித்து விரிவாக மண் மணம் கமழ ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள்.
5 கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நீங்கள் செய்யப் போகும் வேலை தொடர்பாக உங்கள் கனவைப் பற்றி 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவும்.
6 இப்போது பெட்ரோல்/டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் படையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது சரியா..? அவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
7 ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு - 2023’ என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை ஏன் உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்பது குறித்துக் கட்டுரையாக எழுதுங்கள். சிறுதானியங்களைச் சாகுபடி செய்யும் விவசாயி உங்கள் பகுதியில் இருந்தால், அவரின் அனுபவத்தையும் சேர்த்து எழுதலாம்.
(ஆ) புகைப்படத்துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவர் இந்தக் கட்டுரையை அனுப்பத் தேவையில்லை. அதற்கு பதிலாக, எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்புங்கள். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறமும் உங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தால் டிஜிட்டல் வடிவில் அப்லோடு செய்ய வேண்டும்.
(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.
(ஈ) ஓவியருக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தக் கட்டுரையை எழுத வேண்டியதில்லை. ஓவியம் வரைவதில் ஆர்வமும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும். சுயமாகச் சிந்தித்த கருத்துப்படங்கள், சூழ்நிலைக்கேற்ற ஓவியங்கள், கதை, கட்டுரைக்கு ஏற்ற சித்திரங்கள் என ஓவியத் திறமையை வெளிப்படுத்துபவராக இருத்தல் அவசியம். தாங்கள் வரைந்த ஓவியங்களின் மாதிரிகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்தால், டிஜிட்டல் வடிவில் அப்லோடு செய்ய வேண்டும்.
(உ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் + தயாரிப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தாங்கள் பங்களித்த வீடியோ லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும். கட்டுரை எழுதவேண்டியதில்லை.
வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் + தயாரிப்பாளர் பிரிவுகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து,
15.03.2023-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவையில்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.
அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். அது குறித்த தகவல் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். முதற்கட்டத்தில் தேர்வுபெறும் மாணவர்கள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கிடைக்கப்பெறாதவர்கள், முதற்கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.