குதூகலம் அளிக்கும் கோடைப் பயிற்சி!
‘‘சம்மர் கோர்ஸ் என்றாலே, பெற்றவர்களுக்கு பயம் வரும். பயிற்சி நடத்துபவர்கள், கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவாங்க. வசதி இல்லாதவங்க சேர முடியுமா? அந்தக் குழந்தைகளுக்காகவே, ஒவ்வொரு வருடமும் நமது தமிழக அரசு, ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் இலவச கோடைப் பயிற்சி முகாம் நடத்திவருகிறது. அந்த உற்சாகப் பயிற்சிகளைத்தான் இங்கே பார்க்கிறீங்க” என்றார், ராமநாதபுரம் மாவட்டம், ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் லோக சுப்ரமணியன்.

ராமநாதபுரம் அரண்மனையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் அரசு இசைப் பள்ளி. வெளியே, சிறுவர்கள் சுறுசுறுப்பாக சிலம்பம் சுற்றிக்கொண்டிருக்க, உள்ளே

இருந்து பாடல் ஒலித்தது.
‘‘சிலம்பம், பரதம், குரலிசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் எனப் பல கலைகள் இந்தப் பயிற்சி முகாமில் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் 25 முதல் மே 10 வரை நடக்கிறது. இதில், ஐந்து வயதில் இருந்து 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துக்கலாம். கட்டணம் கிடையாது. பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பாகச் செயல்படும் குழந்தைகளுக்கு, தொடர்ந்து பயிற்சிகள் நடக்கும். மாநில அளவில் தேர்வாகும் குழந்தைகள், டெல்லியில் நடக்கும் தேசியப் போட்டிகளில் பங்கேற்கலாம். இதற்கான செலவுகள் அனைத்துமே அரசு செய்யும்” என்றார் லோகசுப்ரமணியன்.

குரலிசைப் பயிற்சியில், பாரதியார் பாடலை அழகாகப் பாடிக்கொண்டு இருந்த ஆகாஷ், ‘‘நான் எட்டாவது படிக்கிறேன். எனக்கு பாட்டுனா ரொம்பப் பிடிக்கும்.பெரிய பாடகன் ஆகணும்னு ஆசை. ஆனா, பணம் கட்டிக் கத்துக்கிற அளவுக்கு வசதி இல்லை. இங்கே பயிற்சி நடக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு வந்தேன். இங்கே நல்லா பயிற்சி எடுத்து, பெரிய பாடகனா வருவேன்” என்கிறார் நம்பிக்கைக் குரலில்.

10-ம் வகுப்பு படிக்கும் கண்ணன், சிலம்பத்தில் அசத்துகிறார். ‘‘நான் ஒன்பது வயசுல இருந்தே சிலம்பம் கத்துக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் இந்தப் பயிற்சியில் கலந்துப்பேன். மாநில அளவிலான போட்டிகளிலும் ஜெயிச்சு இருக்கேன். நமது பாரம்பரியக் கலையைக் கத்துக்கிறதோடு கோடை விடுமுறையில் ஜாலியாக இருக்க முடியுது” என்றவரின் சிலம்பம், காற்றைக் கிழித்துக்கொண்டு சுழல்கிறது.
ர.அரவிந்த்
உ.பாண்டி