
ஆயிஷா இரா.நடராசன்
அன்பு நண்பனே...
நான்தான் கான மயில் எழுதுகிறேன். என்னை ஆங்கிலத்தில், தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு ta(The Great Indian Bustard) என்று அழைப்பார்கள். இது எனது கடைசி அறைக்கூவலாகவும் இருக்கலாம். உங்கள் காலத்திலாவது நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என பதறியபடி இதை எழுதுகிறேன்.

நெருப்புக்கோழி போலவே நெடிந்துயர்ந்த நிலப்பறவை நான். எனது உயிரியல் பெயர், ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் (Ardeotis nigriceps). இந்திய மண்ணின் தேசிய அடையாளம் என்று மன்னர் பாபர் என்னை வர்ணித்துள்ளார். அதாவது, இந்தியாவின் மேல் அவர் படையெடுத்து வந்தபோது, தார் பாலைவனத்தை அவரது படைகள் கடந்தன. நாங்கள் கண்ணில் பட்டதும், அப்போதே இந்தியா வந்துவிட்டதை அவர் முடிவுசெய்தார். காரணம், அப்போது இந்தியாவில் நாங்கள் லட்சக்கணக்கில் இருந்தோம்.
நமது தமிழ் மண்ணின் பழம்பெரும் வரலாற்றில் நாங்கள் ஓர் அங்கம் நண்பா! ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' என்கிற சங்க இலக்கியப் பாடல் உண்மையில் எங்களைத்தான் குறிக்கிறது.
ஒரு மீட்டர் உயரம் உள்ள அழகு நாங்கள். வேகமாக ஓடக்கூடிய இந்தியப் பறவை நாங்கள். மழைக்காலம் முடிந்து குளிர் பருவம், அதாவது வசந்த காலத்தை முன் அறிவிப்பவர்கள் நாங்கள். எங்களில் ஆண் பறவைகள் வசந்த காலத்தில் ‘பும் பும்’ என்று குரல் எழுப்புவோம். அதனை ‘ஓம்...ஓம்' என்பதாக மாற்றி, மார்கழியின் ஓங்காரம் என்று திருமூலர் வர்ணித்துள்ளார்.

பூச்சிகளையும் ஒன்றிரண்டு வகை எலிகளையும் உண்டு வாழ்ந்த நாங்கள், இந்திய மண்ணின் விவசாய நண்பர்களாக இருந்தோம். நாட்டை ஆளவந்த வெள்ளையர்கள் உட்பட வேட்டையாடுதலை பொழுதுபோக்காகவும் சாகசமாகவும் கொண்ட கூட்டம், எங்களை அழிக்கத் தொடங்கியது.
எங்களுக்கு ஓடி ஒளிய இடம் கிடையாது நண்பா! திறந்தவெளியில் கூடுபோல அமைத்து முட்டை இடும் நாங்கள் எங்கே போவது? காடுகள், சோலைகள், புதர்கள் அழிக்கப்பட்டன. பாலங்கள், அணைகள், வீடுகளாக மாறின. சதுப்பு நிலமான வட தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்ந்த நாங்கள் இன்று எங்கே நண்பா?
கொண்டையும் கழுத்துப்பட்டையும் விரித்து படரும் எங்களின் இறகுகள் பேரதிசயம் என்றும், பிறந்த குஞ்சுகளை இறக்கைக்குள் மறைத்தபடி ஓடும் தாய் இயல்பு பரவசம் என்றும் வாழ்த்திய மனிதர்கள் எங்கே நண்பா?
இன்று இந்தியா முழுவதும் 250 கான மயில்களே இருக்கிறோம் என்று சர்வதேச பறவைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இந்திய தேசியப் பறவையாக எதை அறிவிக்கலாம் என்று 1951-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. பறவையியல் நிபுணர், எங்கள் உற்றத் தோழர், சலீம் அலி எங்களையே முன்மொழிந்தார் என்கிறது வரலாறு.
எங்களது இனம் முற்றிலும் அழிவதற்கு முன் நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும். இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி எங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த நண்பர்களிடம் பேசுங்கள். எங்கள் வாழிடங்கள் மேலும் அழியாமல் பாதுகாக்க நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்.
உங்களை நம்பும் அன்பு நண்பன்கான மயில் என்கிற தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு