
அறிவியல் பழகலாம் வாங்க!























மலரினுள் தேனீ!
தேவை: சதுரத் தாள், கலர் ஸ்கெட்ச் பேனாக்கள், கத்தரிக்கோல், அகலமான கிண்ணத்தில் தண்ணீர்.

செய்முறை:
* படத்தில் காட்டப்பட்டதுபோல காகிதத்தில் தேனீயையும் மலரையும் அவுட்லைனாக வரைந்து, அதற்குப் பொருத்தமான கலரை அடிக்கவும். மலரின் இதழுக்கு வெளிப்புறம் இருக்கும் காகிதத்தை வெட்டி நீக்கவும்.
* இதழ்ப் பகுதியை உள் பக்கமாக மடித்துவிடவும். தேனீ, மலரின் இதழால் மூடப்பட்டிருக்கும்.
* மடிக்கப்பட்ட மலரைத் தண்ணீரின் மேல் மிதக்கவிடு.
* சிறிது நேரத்தில் மலரின் இதழ்கள் ஒவ்வொன்றாக மலர்ந்து, உள்ளே தேனீ இருப்பதுபோலத் தெரியும்.
* காகிதத்தில் உள்ள செல்லுலோஸ் இழைகள், தண்ணீரை உறிஞ்சுவதால், காகிதம் விரிவடைகிறது. மடிந்திருக்கும் காகிதம் நிமிர நிமிர, மலரினுள் தேனீ இருப்பது போலத் தெரியும்







அரவிந்த் குப்தா
அறிவியலைப் பிடித்தவர்களுக்கும், அறிவியல் சார்ந்த விளையாட்டுகளை நேசிப்பவர்களுக்கும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்.
தேவையில்லை என்று நாம் குப்பைக்கு அனுப்புகிற பொருள்களை வைத்து, அப்படியே ஓர் உபயோகமான அறிவியல் விளையாட்டுக் கருவியாக மாற்றுவதில் இவர் படு கில்லாடி! இப்படி இவர் உருவாக்கியிருக்கும் விஷயங்களை எண்ண ஆரம் பித்தால், பல செஞ்சுரிகளைத் தாண்டும்! எல்லாமே பார்ப்போரை வியக்கவைக்கும் கலக்கல் க்ரியேஷன்கள்!

அறிவியலை சாதாரண மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றி வரும் அரவிந்த் குப்தா, கான்பூர் ஐ.ஐ.டி.-யில் எம்.டெக் படித்து பட்டம் பெற்றவர். அறிவியலைக் குழந்தைகள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே, தன் மதிப்புமிக்க வேலையைத் துறந்தவர்.
இவர் நடத்திய 1000-க்கும் அதிகமான ஒர்க் ஷாப்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ரொம்பவே பிரபலம்.
அறிவியலைக் குழந்தைகளிடம் பரப்புவதற்கென மத்திய அரசு `National Award for Science Popularisation Amongst Children' என்கிற விருதை 1988-ல்அறிவித்தது. முதல் விருதே அரவிந்த் குப்தாவுக்குதான் வழங்கப்பட்டது என்பது மிகப் பெருமையான விஷயம்!