நாடு முழுவதும் உள்ள என்.ஐ.டி (National Institute of Technology), ஐ.ஐ.டி (Indian Institutes of Technology) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க, ஆண்டுதோறும் ஜே.இ.இ (Joint Entrance Examination) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஜே.இ.இ மெயின் தேர்வு, ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு நிலைகளாக இந்தத் தேர்வு நடைபெறும். அதில், முதல்கட்டமாக மெயின் தேர்வானது இந்தியா முழுக்க நாளை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

வரும் ஜனவரி 31-ம் தேதிவரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. பி.டெக், பி.ஆர்க் போன்ற 50-க்கும் மேற்பட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ மெயின் தேர்வு வழிவகை செய்கிறது. இந்தத் தேர்வுக்கு இந்தியா முழுக்க ஏறத்தாழ 8 - 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 70 சதவிகிதத்தினர் ஆண்கள்; 30 சதவிகிதத்தினர் பெண்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 37,642 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட அதிக அளவிலான பெண்கள் இம்முறை விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த ஜே.இ.இ தேர்வுகளிலேயே இம்முறைதான் அதிக அளவிலான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
'இதன்மூலம் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வதோடு, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், வாழ்க்கைத்தரம் போன்ற அடிப்படைத் தேவைகள் சிறப்பானதாக அமையும். உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும்' என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.