இங்கிலாந்து அரசால் நிறுவப்பட்ட செவனிங் உதவித்தொகைத் திட்டத்தில் (Chevening Scholarships) முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலான படிப்புகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
செவனிங் திட்டம்
இங்கிலாந்தைத் தவிர்த்துப் பிற நாடுகளில் வசிப்பவர்கள், இங்கிலாந்தில் கல்வி பயின்றுவிட்டு, தங்களது சொந்த நாட்டில் பணியாற்றுவதற்காக, உயரிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் இங்கிலாந்து அரசால் 1983 ஆம் ஆண்டு செவனிங் உதவித்தொகைத் திட்டம் (Chevening Scholarships) தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வெளிநாடு, பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், சில கூட்டாண்மை நிறுவனங்கள் (Foreign, Commonwealth and Development Office and Partner Organizations) நிதியினை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை (Scholarship) மற்றும் ஆய்வு உதவித்தொகை (Fellowship) எனும் இரு பிரிவுகளிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பின்னனிகளிலிருந்தும் வரும் மாணவர்கள், சிறந்த உலகத்தை வடிவமைக்கத் தேவையான ஆர்வம், பார்வை மற்றும் திறன்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் தங்களது கல்விக்கான முழுமையான நிதியுதவி பெறுவதுடன் உலகின் தலைச்சிறந்த கல்வி, ஒன்றிணைக்கப்பட்ட சிறப்பு வாய்ப்புகள் மற்றும் இங்கிலாந்தின் மாறுபட்ட கலாசாரம் மற்றும் பண்பாடுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
இதேபோன்று, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களுடன் தொடர்பும் கிடைக்கிறது. மாணவர்களின் எண்ணங்களை உயிர்ப்பிப்பதுடன், அவர்கள் வாழ்க்கையில் செழிப்பைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்பாகவும் இத்திட்டம் அமைந்திருக்கிறது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று இத்திட்டம் வலியுறுத்துகிறது.
இந்திய மாணவர்கள்
செவனிங் திட்டத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள 122 அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகங்களில், ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள், இரண்டு அல்லது மூன்று மாத கால அளவிலான நிதி சேவைகள், இதழியல், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும். இத்திட்டத்தில் இந்திய நாட்டிலிருந்து மொத்தம் 120 மாணவ – மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான முழு படிப்புதவித்தொகையும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தகுதி
இத்திட்டத்தின் கீழான படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விரும்புபவர்கள் இந்தியக் குடியுரிமை கொண்டவராக இருக்க வேண்டும். இங்கிலாந்தில் கல்விக்கான படிப்பை நிறைவு செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளில் சொந்த நாடு திரும்புபவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். இங்கிலாந்தில் படிப்பதற்குத் தேவையான ஆங்கில மொழித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழித் தகுதி குறித்த விவரங்கள் இந்த அமைப்பின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பம்
இத்திட்டத்தில் படிக்க விரும்புபவர்கள் செவனிங் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, விண்ணப்பம் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது செல்லத்தக்க கடவுச்சீட்டு (Valid Passport), தேசிய அடையாள அட்டை (National ID Card), பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் (University transcripts and degree certificates) போன்றவைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருக்கும் படிப்புகளில், அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப ஏதாவது மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2-11-2021, இரவு 12.00 (GMT) மணி வரை.
நேர்காணல்
இணையதளத்தின் வழியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, 2021-ம் ஆண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலத்தில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினால் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்பட்டுத் தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.
2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வார காலத்திற்குள்ளாக இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரகம்/துணைத் தூதரக அலுவலகங்களில் நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர், பிப்ரவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி மாத இறுதி வாரத்திலிருந்து ஏப்ரல் மாதம் இறுதி வரையிலான காலத்தில் இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதன் பின்பு, 28-2-2022 முதல் 29-4-2022 வரையிலான காலத்தில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து மாணவர்களுக்கான நேர்காணல்கள் அந்தந்த நாடுகளிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம்/துணைத் தூதரகம்/உயர் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும். இந்திய மாணவர்களுக்கான நேர்காணல் மேற்காணும் நாள்களுக்குள் ஒன்றாக இருக்கும்.

முடிவுகள்
நேர்காணலுக்குப் பின்பான முடிவுகள் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடற்ற அளிப்புகள் (unconditional offers) மற்றும் ஆங்கில மொழித் தேவைக்கான சந்திப்புகள் போன்றவை 14-7-2022 ஆம் நாளுக்குள் நிறைவு செய்யப்படும். செவனிங் படிப்புதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான படிப்புகள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும்.
கூடுதல் தகவல்கள்
இத்திட்டம் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம். அத்துடன் இந்த இணையதளத்திலிருக்கும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி - பதில்களைப் படித்துத் தெளிவினைப் பெறலாம்.