இந்த கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடனாக ரூ.125 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் இது அதிகமான சதவிகிதமாகும். இதற்குக் காரணமான வங்கி அதிகாரிகளை பாராட்டி மரியாதை செய்தார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், ``2022-23ம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகத்துடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் கூட்டாக விரிவான முயற்சி எடுத்ததன் விளைவாக, கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

Also Read
இதனைத் தொடர்ந்து, வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.119 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.125.98 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 3122. இவர்களில் 2533 பேருக்கு 125.98 கோடி கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 81 சதவிகிதத்தினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 2166 மாணவர்களுக்கு ரூ.111.48 கோடியும், 19 தனியார் வங்கிகள் 367 பேருக்கு ரூ.14.50 கோடியும் வழங்கியுள்ளன.
கனரா வங்கி 468 மாணவர்களுக்கு ரூ.42.57 கோடி வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 989 மாணவர்களுக்கு ரூ.32.80 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன் வழங்கியுள்ளன இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும்.
கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குக் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 93 சதவிகித கடன் வழங்கியுள்ளன. ஆனால் தனியார் வங்கிகளோ 45 சதவிகித விண்ணப்பங்களுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளன. இது குறித்து வங்கிகள் கூட்டத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் ரூ.100 கோடிக்கு மேல் தரப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இந்த ஆண்டு ரூ.125 கோடியையும் தாண்டி மாநிலத்தில் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 81 சதவிகிதத்தினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் சிறந்த முன்னுதாரணம்’’ என்றார்.
மிக அதிக தொகையை கல்விக்கடனாக வழங்கியுள்ள கனரா வங்கி துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு, ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் ராம்பிரசாத், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அனில் மற்றும் சந்தான பாண்டியன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் மாவட்ட நிர்வாகத்தையும், வங்கி அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து தனக்குள்ள அதிகாரம் மூலம் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வழி கிடைக்கும்.