குறும்படம் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற `இல்லம் தேடி கல்வி மைய’ தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளரும் தலைமை ஆசிரியருமான ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, கல்வியாண்டு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட குறுவள மைய குழுத் தலைவர்களான 10 தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், தனது சொந்த செலவில் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து மாவட்ட அளவில் குறும்படம் தயாரிப்பில் வெற்றிபெற்று பரிசு பெற்ற தன்னார்வலர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் நம்மிடம் பேசுகையில், "மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு ’இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இது, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
`இல்லம் தேடி கல்வி மைய’ங்களுக்கு வரும் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பன்முகத்திறன் கொண்டவர்களாகத் திகழவைக்க வேண்டும் என்பதற்காக அங்கு பல்வேறு கற்றல் சார்ந்த செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த மாதம் ’குறும்படம் கொண்டாட்டம்’ என்ற போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தாங்களே சிந்தித்து கதையை கூறி, அதனை மையத்தின் தன்னார்வலர் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களின் துணையுடன் குறும்படமாகத் தயாரித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் தன்னார்வலர்கள் மடவார்வளாகம் சிவகாமி, திருவண்ணாமலை முத்துச்செல்வி ஆகியோரின் குறும்படங்கள் மாவட்ட அளவில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்று, மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டன.
மாவட்ட அளவில் வெற்றி பெற்றமைக்காக தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி சார்பில், தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழை கடந்த வாரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கி கௌரவித்தார்.
தன்னார்வலர்கள் சிவகாமி மற்றும் முத்துச்செல்வி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை, மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கற்றல் உபகரணங்களை வாங்கி வழங்கினர்" என்றார்.

குறும்படம் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத தன்னார்வலர்கள் தங்களது குறைந்த ஊக்க ஊதியத்தில், படங்களை தயாரித்து போட்டியில் கலந்து கொண்டதுமல்லாமல், தங்களை கௌரவித்து அரசு வழங்கிய பணத்தையும் மாணவர்களின் நலனுக்கே பயன்படுத்தியதை, பெற்றோர் மற்றும் சக தன்னார்வலர்கள் பாராட்டினர்.