`அரசாணைகளுக்கு மனிதத்தன்மையே அடிப்படையாக இருக்க வேண்டும்' என்று அரசிடம் வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மாணவிக்கு, கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

இது குறித்து நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன்,``இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமிக்கு, கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில், மதிப்பெண் குறைவு என்ற காரணத்தால் அட்மிஷன் மறுக்கப்பட்டது.
அக்கல்லூரியில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வில் அந்த மாணவி, தன் கால்களால் ஓவியம் வரைந்துள்ளார்.

இந்தப் பிரச்னை என் கவனத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், துறை செயலாளரிடமும் இதுபற்றி எடுத்துக் கூறினேன்.
விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டவிதிகள் வளைந்து கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு. அரசாணைகளுக்கு மனிதத்தன்மையே அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற என் கோரிக்கையை ஏற்று, மாணவி லட்சுமிக்கு அக்கல்லூரியில் சேர்க்கை வழங்க அரசு சார்பில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

`இதுவன்றோ செயல். பெரு மகிழ்ச்சி' என தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சமூக ஊடகத்தில் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.