மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில், குறிப்பாக ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இது போன்று 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் வேறு பள்ளிகளில் சேர்த்துவிட மாநிலக் கல்வித்துறை திட்டமிட்டது.
ஆனால் காட்டுக்குள் மாணவர்களால் நடந்து செல்ல முடியாது என்பதால் அதிகமான பள்ளிகள் இன்னும் செயல்பாட்டில் இருக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள வாஷிம் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் என்ற கிராமத்தில் 200 மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களுக்காக அரசு ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியை நடத்தி வருகிறது.

இப்பள்ளியில் 1 - 4-ம் வகுப்பு வரை படிக்க முடியும். இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் கார்த்திக் என்ற மாணவன் மட்டும் படிக்கிறான். அவன் ஒருவனது படிப்பு வீணாகக்கூடாது என்பதற்காக இப்பள்ளிக்கு தினமும் கிஷோர் மன்கர் என்ற ஆசிரியர் வந்து பாடம் நடத்திவிட்டுச் செல்கிறார். அதுவும் அவர் தினமும் 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தினமும் வருகிறார். இருவரும் பள்ளிக்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து தேசிய கீதம் பாடுகின்றனர். அதனை தொடர்ந்து ஆசிரியர் மாணவனுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார்.
இது குறித்து ஆசிரியர் கிஷோர் கூறுகையில், ’கடந்த இரண்டு ஆண்டில் இந்த ஒரு மாணவன் மட்டும்தான் இப்பள்ளியில் சேர்ந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் நான் மட்டும் தான் ஆசிரியர். மாணவனுக்கு அனைத்து பாடங்களையும் நானே நடத்துகிறேன். அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. மதிய உணவுகூட வழங்குகிறோம்’ என்று தெரிவித்தள்ளார்.
இருக்கும் ஒரு மாணவரும் அடுத்த வருடத்தோடு இப்பள்ளியில் படிப்பை முடித்துவிடுவார். அதன் பிறகு இப்பள்ளி மூடப்படலாம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.