தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்தில், யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேகமலை வன உயிரின சரணாயத்தில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த தேயிலைத் தோட்டத்தில், யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், "மேகமலை வன உயிரினக் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியான மகாராஜமெட்டு அருகில் உள்ள இரவங்கலாறு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், இறந்த நிலையில் ஆண் யானை கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், யானை சடலத்தை மீட்டு ஆய்வுசெய்தனர்.
மழை காரணமாக மண் சரிந்ததால் கீழே விழுந்து, குச்சியில் தலைப்பகுதி குத்தி இறந்திருக்கிறது. தொடர்ந்து ஆய்வுசெய்துவருகிறோம். யானை இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடந்துவருகிறது" என்றார். விசாரணையை முடித்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என்கின்றனர் சூழலியலாளர்கள். மேகமலை முழுவதும் உள்ள தேயிலைத் தோட்டங்கள், தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.