தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களைக் கொண்டது. 626 ச.கி.மீ பரப்பளவுள்ள மேகமலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அதை வன உயிரின சரணாலயமாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், மேகமலை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த நிலையில், அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் மேகமலையையும் இணைத்து புலிகள் காப்பகம் உருவாக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேகமலையில் 8 புலிகள் மட்டுமே இருந்த சூழலில், 2018-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் மேகமலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாவட்ட வனத்துறையும் மேகமலையை புலிகள் காப்பகமாக மாற்ற பரிந்துரைத்தது. அதற்கான பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கியது.
தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத் தையும் இணைத்து, நாட்டின் 51வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால், வன விலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் வன விலங்கு ஆர்வலர்கள், ``ஒரு காடு வளமாக இருக்கிறதா என்பதை அறிய, அங்குள்ள யானைகள், புலிகளைக் கணக்கிட்டாலே போதும். அவைதான் காட்டை சமநிலையில் வைத்துள்ளன. ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் வாழும் குணம் கொண்டது புலிகள். அந்த வகையில், மேகமலை போலவே, அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலய வனப்பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவேதான், மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தோம். தற்போது மத்திய அரசு அனுமதியளித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி” என்றனர்.