தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தேனி மாவட்டம் 33% காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வைகை அணைக்கு 2 இடங்களில் இருந்து தண்ணீர் உற்பத்தியாகி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் செல்கிறது. தண்ணீர் உற்பத்தியாகும் இடங்களில் முக்கியமான ஒன்றாக மேகமலை வனப்பகுதி உள்ளது. மேகமலை வனப்பகுதியின் எல்லைகளானது, கேரளாவிலுள்ள மலைப்பகுதி மற்றும் விருதுநகரிலுள்ள மலைப் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. இதனால் இப்பகுதியில் அரிய வகை வன உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன.
மேகமலை வனப்பகுதியில் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை 2,292 ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயத்துக்காக மரங்களையும், அப்பகுதியில் உள்ள வன விலங்குகளையும் அழித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை ஆக்கிரமிப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து அகற்றப்படவில்லை. எனவே, மேகமலை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்" எனத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
‘2019-ம் ஆண்டு மேகமலை வனப்பகுதியில் குடியிருப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற ஆயிரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும், மேகமலை வனப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தேனி மாவட்ட கலெக்டர் மூலம், அப்பகுதி மக்களிடம் சமாதானக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுமுகமான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
`தேர்தல் நெருங்குவதால் வாக்குகள் பாதிக்கும் என்பதாலே ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதிகள், `வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களை அனுமதித்தால், காடுகள் அழியும் சூழ்நிலை ஏற்படும். எனவே, வணிக ரீதியாக விவசாயம் நடைபெறுவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேகமலை ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்களை அகற்ற, மாவட்ட வனத்துறையும், வருவாய்த்துறையும் முயற்சி எடுத்தபோது, மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு, விவசாய சங்கங்கள் முன்னெடுப்பில் பெரும் போராட்டங்கள் நடந்த குறிப்பிடத்தக்கது.