விவசாயத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஐரோப்பாவில் பல பறவை இனங்கள் அழிந்துள்ளதாகப் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 28 நாடுகளில் கடந்த 37 வருடங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் அனைத்து நாடுகளிலும் 25% பறவைகள் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு ரசாயன விவசாயமே மிக முக்கிய காரணம் என்று ஆய்வு சொல்கிறது. பறவைகள் அழிவுக்கு காற்றாலை மின் கோபுரங்கள், செல்போன் டவர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தத் தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

PNAS (The Proceedings of the National Academy of Sciences) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஐரோப்பாவில் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை புரிந்துகொள்ள, காலநிலை மாற்றம் மற்றும் நில பயன்பாட்டு மாற்றம் உள்ளிட்ட மனிதனால் ஏற்படும் அழுத்தங்களுக்கு 170 பறவை இனங்கள் எவ்வாறு எதிர்வினை செய்கின்றன என ஆய்வு நடத்தப்பட்டது. பறவைகள்தான் நிலப்பரப்பின் முதுகெலும்பு. ஆனால், அவை தற்போது விவசாயம், நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காலநிலை மற்றம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில், ஐரோப்பாவில் பொதுவான பறவை இனங்கள் 1980 முதல் 2016 வரை ஏராளமாக குறைந்துவிட்டதாகக் கண்டறிந்துள்ளனர். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பட்டால் பூச்சிகளை உணவாக கொண்டுள்ள மஞ்சள் வாக்டெயில் போன்ற முதுகெலும்பில்லாத பறவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வைத் தொடர்ந்து இதிலிருந்து முன்னோக்கி செல்லும் வழியைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய மக்களை நோக்கி அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தின் பறவைகளை பாதுகாக்கக்கூடிய ஒரு விவசாய சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தீவிர விவசாய நடைமுறைகளிலிருந்து அதிக உற்பத்தித் திறனை சமநிலைபடுத்த போராட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.