கூம்பு வடிவம், பச்சை பசேல் நிறம், அடர்த்தியான கிளைகள் என சாலைகளில் நாம் காணும் கோனோ கார்பஸ் பலரையும் கவர்ந்திழுக்கும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவை அதிகம் வளர்க்கப்படுகின்றன.
என்னதான் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்த கோனோ கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ``கோனோகார்பஸ் என்பது அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் வளரும் தாவரமாகும். வேகமாக, அதிக அடர்த்தியுடன் வளரும் இந்தச் செடிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் விதமாக காலனிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், வீடுகளின் முகப்புகளில் அதிகம் வளர்க்கிறார்கள்.

இதன் வலுவான வேர்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதுடன், குடிநீர் குழாய்கள், வடிகால்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன.
கோனோ கார்பஸ் மரங்கள் குறித்து கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி கண்ணன் வாரியரிடம் பேசியபோது, ``இந்த மரங்கள் பூபூக்கும்போது இதிலிருந்து வெளிப்படும் மகரந்த துகள்கள் காற்றில் கலந்து அதைச் சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜியை உண்டு பண்ணுகின்றன.

அதேமாதிரி இந்த மரத்தின் வேர்கள் பூமிக்கடியில் மிக ஆழமாகச் செல்கின்றன. நகரப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் இது அதிகமாக நடப்படுவதால், தண்ணீர் குழாய், கழிவு நீர்க் குழாய்கள் போன்ற குழாய்களைச் சுற்றிக்கொள்கின்றன. இதனால் குழாய்களைப் பழுது பார்க்கும்போதோ, குழி தோண்டும்போதோ மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இது சம்பந்தமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆராய்ச்சி செய்து இந்தத் தகவலை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு இதைத் தடை செய்துவிட்டார்கள். தெலங்கானாவில் அரசு மூலமாகவே பல இடங்களில் இந்த மரங்களை நட்டுள்ளனர். அதன் விளைவையே தற்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான், ஈரான் நாடுகளிலும் இதைத் தடை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மரங்கள் எங்கும் நடப்பட்டதாகத் தெரியவில்லை. இதுசம்பந்தமாக எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. இருப்பினும் கோனோ கார்பஸ் மரங்களை யாரும் நட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எச்சரிக்கை செய்கிறோம்" என்றார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் முனைவர் பார்த்திபனிடம் கேட்டபோது, ``மரம் மிக வேகமாக வளர்வதால் பலரும் வளர்க்க முன் வருகின்றனர். ஆனால், இதில் மாவுப் பூச்சி அதிகம் வருகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் இதைத் தடை செய்துள்ளனர். இது தானாக பரவாது. இருப்பினும் இது தீய மரம் என்பதால் ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் குறித்து பெரிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பிரச்னைகள் இருப்பதால் இதுபோன்ற வெளிநாட்டு மரங்களைத் தவிர்த்து, உள்நாட்டு மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.