கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானை, புலி, மிளா, முயல் போன்ற அறிய வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தின் காரணமாகத் தண்ணீர் அருந்தவும் உணவு தேடியும் பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளின் அருகில் வருவது வழக்கம். குடியிருப்புப் பகுதிகளில் வரும் வனவிலங்குகளை வனத்துறை அதிகாரிகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டி விடுவது வழக்கம். குடியிருபுப் பகுதிக்கு வரும் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யவதோ, வேட்டையாடுவதோ சட்டப்படி குற்றமாகும்.

ஆனால், வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது ஆங்காங்கே நடந்துவருகிறது. வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் விதமாக வனத்துறையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். ஆனாலும், வேட்டையாடும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துவருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் வனப்பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டி வன சரகத்துக்குள் வருகிறது.
பணக்குடியை அடுத்த தெற்கு கருங்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான எஸ்டேட் பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் சிலர் வேட்டையாடி வருவதாக வனதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்கள் அப்பகுதியில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு முள்ளம் பன்றி வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
அந்த எஸ்டேட்டின் உரிமையாளரான வழக்கறிஞர் சுப்ரமணியம், அவரின் நண்பர்களான நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பெருமாள்பிள்ளை, இளமுருகுமார்த்தாண்டம் ஆகியோரும் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியம் உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் வேட்டைக்கு துப்பாக்கி கொண்டு சென்ற ஜோஸ், வேட்டைக்கு உடன் வந்த ஜான் பெர்லின் உட்பட ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இவர்களால் வேட்டையாடப்பட்ட முள்ளம்பன்றி இறந்த நிலையில் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்களை நாகர்கோவில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்று, பின்னர் உடல் பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மூன்று வழக்கறிஞர்களும் உடல்நலம் சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜோஸ், ஜான்பெர்லின் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேட்டைக்குப் பயன்படுத்திய சிங்கிள் பேரல் பிரேஜ் லோடு (SBBL) துப்பாக்கி அரசு அனுமதி பெறாமல் வைத்திருந்ததாகப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வேட்டைக்கு அவர்கள் சென்ற சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடைக்காகத் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் விதமாக மாவட்ட வன அலுவலர் இளையரஜா தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.