கேரளாவில் உள்ள கோயில்களில் யானைகள் இன்றி சிறப்புப் பூஜைகள் நடைபெறாது. கோயில்களுக்கென்றே பழக்கப்பட்ட யானைகள் சங்கிலிகளின் தூரம் வரை மட்டுமே நடக்கப் பழகிக் கொண்டவை. பூஜைகளின்போது ராஜ மரியாதை கிடைத்தாலும், சுதந்திரம் என்பது அந்த ஜீவன்களுக்குக் கேள்விக்குறிதான்…
இந்நிலையில், கேரளாவின் திரிச்சூரில் உள்ள இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் `ரோபோ யானை' ஒன்றை பீட்டா அமைப்பினர் கொடுத்துள்ளனர். இதன்பின் பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் சேவை செய்ய இந்த யானை தயார் நிலையில் இருக்கிறது.

11 அடி, 800 கிலோ எடையோடு, ரப்பர் கோட்டிங் மற்றும் அயர்ன் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த யானை, பார்ப்பதற்கு அச்சு அசலாக நிஜ யானையைப் போலவே இருக்கிறது. அதோடு காதுகள், வாலை ஆட்டிய வண்ணம் இருக்கும் இந்த யானை, மின்சாரத்தால் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரோபோடிக் யானைக்கு `இரிஞ்சாடப்பிள்ளி ராமன்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நான்குபேர் யானைமீது அமர்ந்துகொள்ளலாம்.
சாலக்குடி போட்ட ஃபோர் ஹி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸை சேர்ந்த சிற்பிகள் பி.பிரசாந்த், கே.எம்.ஜினேஷ், எம்.ஆர்.ராபின் மற்றும் சான்றோ ஜோஸ் ஆகியோர் இரண்டு மாதங்களில் எந்திரன் யானையை 5 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து பீட்டா இந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இரிஞ்சாடப்பிள்ளி ராமனைச் சந்தியுங்கள். பார்ப்பதற்கு நிஜ யானையைப் போல இருக்கும் இவன், முழுதும் எந்திரமானவன். சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள் சங்கிலியிடப்பட்டு, அடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது.

கேரளாவின் இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில், இதன்பின் சடங்குகள் செய்ய ஓர் உயிர் போன்ற இயந்திர யானை பயன்படுத்தப்படும். இதை பீட்டா இந்தியா நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
``யானைகள் சமூக வாழ் உயிரினம். இவை தங்கள் குடும்பத்தோடு காடுகளில் வாழ வேண்டியவை. இந்த ரோபோடிக் யானை, உண்மையான யானைகள் தங்கள் குடும்பங்களுடன் இயற்கையோடு வாழ அனுமதிக்கும். உங்கள் உள்ளூர் கோயில்களிலும் மெக்கானிக்கல் ரோபோக்களை உபயோகிக்க ஊக்குவியுங்கள். நிஜ யானைகளை சங்கிலிகளின்றி சரணாலயங்களுக்கு அனுப்புங்கள்'' என பீட்டா தெரிவித்துள்ளது.