Published:Updated:

குடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி? #DoubtOfCommonman

குழாய் நீர்
News
குழாய் நீர்

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை.

Published:Updated:

குடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி? #DoubtOfCommonman

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை.

குழாய் நீர்
News
குழாய் நீர்
வீட்டில், குடிநீரை எளிமையாகச் சுத்திகரிக்கும் வழிமுறைகள் என்னென்ன என விகடனின் #DoubtOfCommonman பகுதியில் கேட்டிருந்தார் வாசகர் இளவேந்தன். அவருக்கான பதில் இதோ.

தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை குடிக்கக் கூடாது... வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம். சாதாரணமாக குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீர் மாசடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதைக் கண்டிருக்கலாம். அதனால், தண்ணீர் குறித்த பயம் தோன்றக் கூடும். இதற்காக, பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படியென்றால், எங்கள் ஊரில் தண்ணீர் கெட்டுப்போயிருக்கிறது, இதற்காகத் தண்ணீரை அப்படியேவா குடிக்க முடியும் என்று நினைப்பது புரிகிறது. ஆனால், மாசடைந்த நீரை சுத்திகரிக்க சில இயற்கை முறைகளும் இருக்கின்றன.

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. இன்றையச் சூழலில், நோய்களிலிருந்து தப்பிக்க தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மண்பானை சுத்திகரிப்பு!

எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள், மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. மண் பானையில் குடிநீரை ஊற்றிவைத்து, இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். அதன் பின்னர், நமக்கு தூய நீர் கிடைக்கிறது. மண்பானை, இயற்கையின் ஆகச்சிறந்த வாட்டர் ஃபில்டர். 40,000 செலவு செய்து வாட்டர் ஃபில்டர் வாங்க நினைப்போர், 100 ரூபாய் செலவு செய்து வீட்டில் ஒரு மண்பானையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக்கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.

மண்பானை
மண்பானை

செம்புக் குடங்கள் மூலம் சுத்திகரிப்பு!

செம்புக் குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை தண்ணீரை ஊற்றிவைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து, தண்ணீரை சுத்தப்படுத்தலாம். மண்பானையில் செப்புக் காசுகளைப் போட்டுவைப்பதன் மூலமாகவும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரை கொதிக்கவைத்த பின்னர், நெல்லிக்கனிகளையும் சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரை காய்ச்சும்போதே சீரகத்தைப் போட்டும் கொதிக்க வைக்கலாம். நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண்சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும்.

தேற்றான் கொட்டை!

தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டுவைக்கலாம். தேற்றான் கொட்டை ஊறிய நீர், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும். கேன்வாட்டரிலும் தேற்றான் கொட்டையைப் பயன்படுத்தலாம். நீர்த்தேக்கத் தொட்டியிலும்கூட, உடைத்த தேற்றான் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்துபோடலாம்.

வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றை தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும், நீருக்கு சுவையும் கூடும்.

சாய மரப் பட்டைகள்!

கருங்காலி வேர்ப்பட்டை, பதிமுகம் எனப்படும் சாய மரப் பட்டைகள் போன்றவற்றைத் தண்ணீரில், கொதிக்கவைத்துப் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில் பல இடங்களில், குடிநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம், பதிமுகம்தான். பதிமுகத்துக்கு தோல் நோய்களைப் போக்கும் தன்மையும் கிருமிகளை அழிக்கும் குணமும் இருக்கின்றன.

இப்படி இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு அதிக பண முதலீடு செய்து கருவிகளை வாங்க வேண்டும்? இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் ஆரோக்கியமாக!

Doubt of Common Man
Doubt of Common Man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.