நீலகிரி உயிர்சூழ் மண்டலம் அரியவகை தாவரம் மற்றும் விலங்கினங்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது. வளர்ச்சியின் பெயரால் தொடர்ந்து காடுகள் துண்டாடப்படுவதால் பல அரியவகை உயிரினங்கள் அழிந்துவரும் பட்டியலில் உள்ளன. நீலகிரி உயிர்சூழ் மண்டலத்தின் குறியீடாக கருதப்படும் வரையாடு [Nilgiritragus hylocrius] ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க பரவி காணப்பட்டன.

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் வேட்டை, காடழிப்பு , குறைந்துவரும் புல்வெளிகள், அதிகரிக்கும் களை தாவரங்கள் எனப் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டன. தற்போது முக்குருத்தி தேசிய பூங்காவில் மட்டுமே வரையாடுகள் காணப்படுகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் முக்குருத்தி தேசிய பூங்கா நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 78.4 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள் அதிகளவு வாழ்கின்றன. கடந்த 1972-ம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு இவற்றுக்கான அச்சுறுத்தல்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளன.

தற்போது தமிழகத்தின் நீலகிரியில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா, ஆனைமலை பகுதிகள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வரையாடுகள் காணப்படுகின்றன. இந்தநிலையில், முக்குருத்தி தேசிய பூங்காவில் வனத்துறை சார்பில் வருடாந்திர வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கணக்கெடுப்பில் கடந்த 3 ஆண்டுகளில் வரையாடுகளின் எண்ணிக்கை 27 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2016-ல் வரையாடுகள் எண்ணிக்கை 480 ஆக இருந்தது. 2017-ல் 438 ஆகவும், 2018-ல் 568 ஆகவும் வரையாடுகளின் எண்ணிக்கை இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கணக்கெடுப்பில் 618 ஆக உயர்ந்துள்ளது. வரையாடுகளின் எண்ணிக்கை 2016 -ல் 480-ம், 2017-ல் 438-ம், 2018ல்- 568-ம், 2019-ல் 612 ஆகவும் இருக்கிறது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் செண்பக பிரியா கூறுகையில், ``வரையாடுகளின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இந்தமுறை கணக்கெடுப்பில் இளம் வரையாடுகளை அதிகம் காண முடிந்தது. அதிலும் பெண் வரையாடுகள் அதிகம் தென்பட்டன. இது அவற்றின் எண்ணிக்கை உயர நல்ல வாய்ப்பாக அமையும். வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவற்றைப் பாதுகாக்க வனத்துறை பாடுபடும்'' என்றார்.
கள இயக்குநர் கௌஷல் கூறுகையில், ``முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது வரவேற்கக்கூடியது. கணக்கெடுப்பில் பாலின விகிதமும் சிறப்பாக உள்ளது தெரியவந்தது. 78 சதுர கி.மீட்டர், பரப்பளவுள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில் சுற்றுலா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விலங்குகள் இடையூறின்றி உலா வருகின்றன. ஸ்காட்ச் புரூம், கார்ஸ், சீகை போன்ற அந்நிய களை தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் காலங்களில் வரையாடுகளுக்கு அதிகளவிலான உணவு கிடைக்கும். தொடர்ந்து அந்நிய களை தாவரங்களை அகற்ற வனத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.