சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1409 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. முன்பு யானைகள் சரணாலயமாக இருந்த இந்த வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
ஆரம்பத்தில் புலிகளின் எண்ணிக்கை 10 -க்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. டபிள்யு டபிள்யு எஃப் எனப்படும் உலக வனஉயிரின நிதியத்தின் அறிவுரைப்படி புலிகள் காப்பகம் கோர் மற்றும் பஃபர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

15 ஆண்டுக்கு முன் 10 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் வனத்துறையினரின் பல்வேறு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை இந்த காப்பகத்தில் பல்கி பெருகி வருகிறது.
பொதுவாகவே, புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் அடிப்படையில் வனப்பகுதியின் வளம் கணக்கிடப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பின்படி தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றன. கணக்கெடுப்பின்படி இந்த காப்பகத்தில் 100 புலிகளும் சுமார் 800 யானைகளும் இருக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநருமான கிருபாசங்கர் நம்மிடம் கூறியதாவது,
''சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனக்கோட்டத்தில் சத்தி, கடம்பூர், பவானிசாகர், விளாமுண்டி, தலமலை, டி.என்.பாளையம் ஆகிய 6 சரகங்கள் உள்ளன.
ஆசனூர் வனக்கோட்டத்தில் ஆசனூர், ஜீரஹள்ளி, தாளவாடி, கேர்மாளம் ஆகிய 4 வனச்சரகங்களும் அமைந்துள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியின்போது நீர்நிலைகள், சதுப்பு நிலங்களிலும், வனப்பகுதிகளில் இருந்தும் பதிவாகியிருந்த புலிகளின் கால் தடத்தின் அச்சு, புலிகளின் நடமாட்டத்தை உறுதிபடுத்தும் தடயங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தடயங்களை மத்திய வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுமார் 100 புலிகளும், 800 யானைகளும் இருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறியும் வகையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு சில தினங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. 10 வனச்சரகங்களிலும் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 2 சதுர கி.மீ.க்கு 1 இடத்தை தேர்வு செய்து தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 700 இடங்களில் 1400 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இந்த கேமராக்கள் மூலமாக ஒரு மாதத்துக்கு புலிகளின் நடமாட்டம் கண்டறியப்படும்.
கேமராக்களில் சேகரிக்கப்படும் புகைப்படங்களை வைத்து புலிகளின் மீதுள்ள வரிகளின் அமைப்பு, முகத் தோற்றம் போன்றவற்றை ஒப்பிட்டு கணக்கெடுப்பு நடத்தப்படும். பொதுவாகவே ஒவ்வொரு புலிகளின் மீதுள்ள வரிகளும் மாறுபடும். அதை அடிப்படையாக வைத்து அவற்றின் எண்ணிக்கை துல்லியமாக கண்டறியப்படும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் புகைப்படங்களையும், பிற தடயங்களையும் மத்திய வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல நாடு முழுவதும் புலிகள் காப்பகங்களில் நடத்தப்படும் கணக்கெடுக்கும் புள்ளிவிபரங்கள் அனைத்தும் இங்கு சேகரிக்கப்படும். கணக்கெடுப்பின் முடிவுகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) மூலமாக வெளியிடப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்தும், ஒவ்வொரு புலிகள் காப்பகத்திலும் உள்ள புலிகளின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்'' என்றார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருப்பது குறித்து மேலும் அவர் கூறுகையில், ''அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 800 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. யானைகளின் இயற்கையான வழித்தடமாக சத்தியமங்கலம் வனப்பகுதி அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பண்டிப்பூர் வனச் சரணாலயம், முதுமலை வனப் பகுதிகளில் இருந்து செப்டம்பர் இறுதியில் இடப்பெயர்ச்சியான காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக சத்தி, ஆசனூர் வனக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இந்த யானைகளின் நடமாட்டத்தை வேட்டைத் தடுப்பு காவலர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களை நாசம் செய்யாமல் இருப்பதற்காக வனப்பகுதியின் எல்லைகளில் ஏற்கெனவே அகழி வெட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் அகழிகளை மண் மூடியுள்ளது. இவற்றை சரி செய்யவும், தேவைப்படும் இடங்களில் புதிதாக அகழி வெட்டவும் திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு பெற்று அகழிகள் வெட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் கிருபாசங்கர்.