பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை நீர்நிலைகளில் கலப்பது தொடர்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் இனி, கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியிலுள்ள நீர்நிலைகளில், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் லாரிகளில் கொண்டு சென்று வெளியேற்றப்படுவதாகப் புகார் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், கானாத்துார் மற்றும் ரெட்டிகுப்பம் போன்ற குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரானது, தனியார் லாரிகள் மூலமாக பக்கிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை வெளியேற்றிய லாரியின் உரிமத்தை ரத்து செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் மட்டும் அல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.