உங்களின் உடல் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் என்ன நடக்கும்... மூளை ஒன்றைச் சொல்ல, உடல் ஒன்றைச் செய்ய, இது என்னுடைய உடல் இல்லை, வேறோர் உடலில் நான் வாழ்கிறேன் எனத் தோன்றும். இத்தகைய பிரச்னைகளையே மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்கிறார்கள். அதை எதிர்த்துப் போராடி தங்களது சுய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
``நாங்கள் தவறான உடலில் பிறந்துவிட்டோம். அதைக் கண்டுபிடித்து எங்கள் பாலினத்தை மாற்றினோம்’’ என்கிறார், நோயெல்லா மெக்மேஹர் (Noella McMaher).

யார் இவர் என்ற ஆர்வம் எழுகிறதா..? பிப்ரவரி மற்றும் செப்டம்பரில் நடைபெற்ற நியூயார்க் ஃபேஷன் வீக்கில் தன்னுடைய 10 வயதிலேயே கலந்துகொண்ட இளம் திருநங்கை மாடல் என்ற சிறப்பைப் பெற்றவர். பிப்ரவரி மாதத்தில் ட்ரான்ஸ் ஆடை நிறுவனத்துக்காக ரன்வே 7 நிகழ்ச்சியில் மாடலாக பங்கேற்றவர்.
நோயெல்லா, தன்னுடைய 2 வயதிலேயேதான் ஒரு பெண் எனத் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரும் அவள் வாழ்வின் பயணத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் திருநங்கை குழந்தைகள், மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நோயெல்லா விரும்புகிறார்.
அதோடு, ``நாங்கள் தவறான உடலில் பிறந்துவிட்டோம். அதைக் கண்டுபிடித்து எங்கள் பாலினத்தை மாற்றினோம். திருநங்கைகளாக இருப்பது மோசமானதல்ல என்பதை மற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் என் செயல்கள் மூலம் காட்டுகிறேன். வளரும்போது நான் என்னவாக இருப்பேன் என்பது தெரியாது; ஆனால், இந்தக் குறுகிய காலகட்டத்தில், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் மாடலாக நடப்பதுதான் என்னுடைய திட்டம்'' எனத் தெரிவித்துள்ளார்.
நோயெல்லாவின் பெற்றோர்கள் டீ மற்றும் ரே மெக்மேஹர், அவளின் கனவுகளை ஊக்கப்படுத்துகின்றனர்.
``அவள் ஒரு ஆக்டிவிஸ்ட்டாக இருக்க விரும்புகிறாள், மற்ற திருநங்கை குழந்தைகளுக்குத் தெரியும் வகையில், தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாள். இது உலகில் மிக முக்கியமானது என நாங்கள் அறிவோம். குறிப்பாகத் தற்போதைய அரசியல் சூழலில் அவளைப் போல இருக்கும் மற்ற குழந்தைகளுக்கும், அவளுக்கும் எதிராகப் பல விஷயங்கள் நடக்கின்றன’’ என்று டீ கூறியுள்ளார்.
வாழ்த்துகள் நோயெல்லா மெக்மேஹர்!