ஊரே மெச்சும் அளவில் தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும், அந்த நீங்கா நினைவுகளை எப்போது பிறர் கேட்டாலும், மெச்சும் படி இருக்க வேண்டும் எனத் திருமணம் குறித்த கனவுகள் பலருக்கும் இருக்கும். சொந்த ஊரில், கோயிலில், திருமண மண்டபங்களில் என தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வு செய்து கோலாகலமாகத் திருமணங்கள் நடைபெறுவதுண்டு.

இதற்கு ஒருபடி மேலே போய், கடற்கரைகளில் திருமணங்களை நடத்தி வந்தனர். கடற்கரை திருமணங்களுக்குக் கோவா தான் சிறந்த இடம். கோவிட் தொற்றின் சமயத்தில், கோவாவில் கடற்கரை திருமணங்கள் குறைந்த நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை பகுதி அந்த இடத்தை பிடித்துள்ளது என்றே கூறவேண்டும்.
இங்கு கடலுக்கடியில் திருமணங்களும், காதலை ப்ராபோஸ் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த சேவைகளை தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

கடலுக்கடியில் திருமணங்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷாலினி கூறுகையில், ``கடந்த ஆண்டு 200 ப்ரபோசல்கள் கடலுக்கடியில் நிகழ்ந்தது. பயிற்றுவிப்பாளருடன் ஒருமணிநேரம் கடலுக்கடியில் இருந்து கொண்டே தங்களது காதலைத் தெரிவிக்க 25,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
கொல்கத்தா, மும்பை, கொச்சி, டெல்லி, பெங்களூரு போன்ற பல பகுதிகளிலிருந்து காதலர்களும், புது ஜோடிகளும் வருகின்றனர். இதோடு திருமணங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை புரிகின்றனர். மாமல்லபுரத்துக்கு விமான போக்குவரத்து வசதி எளிதாக உள்ளதால் கடலுக்கடியிலான திருமணங்கள் அதிகரித்து வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.