
என் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை!
எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்றன. அதற்குள் வாழ்வில் ஏதோ ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டதாக எண்ணி திணறுகிறேன்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எனக்கு வயது 25. வாசிப்புப் பழக்கம்தான் சுவாசம் என வளர்ந்தவள். படித்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள கல்லூரிக் காலத்தில் ஓர் இலக்கிய வட்டமே இருந்தது. திருமணத்துக்குப் பின்பு குடும்பப் பொறுப்புகளாலும், அலுவல் காரணங்களாலும் என் வட்டம் மிகவும் சுருங்கிவிட்டது. செய்தித்தாள், பத்திரிகை செய்திகளை, இலக்கிய ரசனையை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து ஆலோசிப்பதில் எல்லாம் என் கணவருக்கு ஆர்வமில்லை. எந்த விஷயத்தையும் அறிவுபூர்வமாகப் பார்க்க வேண்டும், எதையும் விவாதித்து தெளிய வேண்டும் என்பது என் குணம். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாத சூழல், என் மனநிலையை இறுக்கமாக மாற்றிவருவதை உணர்கிறேன்.
அலுவலகத்திலும் நிலைமை இதுவே... அங்கு சக ஆண் ஊழியர்கள், நண்பர்களிடம் நான் படிக்கும், கேட்கும் பொது விஷயங்களைப் பற்றிப் பேச முடியும். ஆனால், ஒரு பெண் ஆர்வமாக முன்வந்து பொது விஷயங்களைப் பற்றி பேசுவதை ஆரோக்கியமாகப் பார்க்கும் சூழல் என் அலுவலகத்தில் இல்லாததால், அதைத் தவிர்க்க வேண்டியுள்ளது.
இன்னொரு பக்கம், பெண் தோழிகளிடம் இது போன்ற விஷயங்களைப் பேசுவது என்பது சேலஞ்சிங்காக உள்ளது. வீட்டுப் பிரச்னைகள், சக ஊழியர்கள் மீதான காழ்ப்பு உணர்வு என்று அவர்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கின்றனர். மேலும், இதுபோன்ற விஷயங்களையே அவர்கள் தொடர்ந்து பேசுவதைக் கேட்கும்போது, என மனதில் உள்ள பாசிட்டிவ் எண்ணங்களும் காலியாகிவிடும் என்று தோன்றுகிறது. ஆர்வமாகப் பணிபுரிபவர்களை `டிமோடிவேட்’ செய்து, ஆக்கபூர்வமாக சிந்திக்கவிடாத அவர்களின் பேச்சு, எனக்கு மன உளைச்சலைத் தருகிறது. அதேசமயம், இவர்களோடு பேசுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.
நிறையப் படிக்கவும், நிறைய விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக உணர முடிகிறது. இந்தக் குணம் இயல்பானதுதானா... அல்லது, நான் மனநல மருத்துவரை அணுக வேண்டுமா? முற்றிக்கொண்டே போகும் மன இறுக்கத்தில் இருந்து மீள வழி சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி
என் டைரி - 402 - ன் சுருக்கம்

நான் சத்யா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இன்றைய யுகம் அள்ளித் தந்த அத்தனை அப்டேட்ஸும் ஊட்டி வளர்க்கப்பட்டவள் எங்கள் மகள் இதயா. என் மகளும் கணவரும் அவ்வளவு திக் ஃப்ரண்ட்ஸ். இதயா 16 வயதை எட்டிய பின் ஒரு விபத்தில் என் கணவர் இறந்துவிட... நாங்கள் இருவரும் தனித்துவிடப்பட்டோம். என்னுடைய எண்ணங்களும், இதயாவின் எண்ணங்களும் பெரும்பாலும் நேரெதிராகவே இருந்தன. வெளியிடங்களுக்கு நண்பர்களுடன் செல்வது, குரூப் ஸ்டடி என்று வெளியில் தங்குவது, பெண் என்பதைத் தாண்டி புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது எனப் பறந்து பதற வைத்தாள். அவளது 18 வயது, என்னுடைய சிந்தனையில் கத்தி இறக்கியது. அந்த வயதுக்கே உள்ள அபாயங்கள் என்னை நிம்மதியின்றி தவிக்க வைக்கின்றன. அவளோ அபாயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுதந்திரத்தை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறாள். அவள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நான் அவளைக் கண்டிக்க ஆரம்பித்ததன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் நானும் அவளும் ஒரே வீட்டில் பேசிக்கொள்வதுகூட நின்றுபோனது. அவள் ஒழுக்க விஷயங்களில் எந்தப் பிரச்னையையும் இழுத்து வராவிட்டாலும் என் மனம் பரிதவிப்பதை நிறுத்தவில்லை. அவளது சிந்தனையை அவளது இடத்தில் நின்று என்னால் பார்க்க முடியவில்லை. பெண்கள்மீது நடத்தப்படும் வன்கொடுமைகளும், ஒருதலைக் காதல் கொலைகளும் அவளைப் பற்றிய பயத்தை அதிகரித்துள்ளன.
அவளை எப்படிப் புரிந்துகொள்வது... எப்படிப் பாதுகாப்பது?
சிநேகிதிக்கு..சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
படிப்படியாக செய்யுங்கள்!
வெள்ளம் கரையைத் தாண்டி விட்டது. இனி நீங்கள் எதைச் சொன்னாலும் தவறாகவோ, எதிராகவோ தான் உங்கள் மகள் சிந்திப்பாள், செயல்படுவாள். எனவே, அவள் பழகும் நட்பு வட்டங்களைக் கண்காணித்து அவர்களோடு நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் படிப்படியாக நீங்கள் சில கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கை உணர்வுகளையும் விதைக்கலாம். வாழ்த்துகள்.
- ஆர்.பிரவீணா, மதுரை-4
விட்டுப்பிடிப்பதே நல்லது!
இக்கால இளைஞர்களுக்கு ‘அறிவுரை’ கூறுவது சற்றும் பிடிக்காத விஷயம்தான். ஆனால், என்ன செய்வது? காலத்தின் கட்டாயமாச்சே! நீங்கள், அடிக்கடி சொன்னதையே சொல்லாமல், ‘ஊர் உலகத்தில் இப்படியெல்லாம் நடக்கிறது. நாளிதழில் படித்தேன். ஜாக்கிரதையாக இரு’ என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், அன்பாக நைஸாக கூறுங்கள். விட்டுப்பிடிப்பதே நல்லது. இதைப் பற்றியே யோசித்து கொண்டிருந்தால் உங்கள் உடல்நிலை பாதிக்கும்.
- ப்ரீிதா ரங்கசாமி, சென்னை-4
அவள் போக்கில் செல்லுங்கள்!
இந்தக் காலத்தில் சிறியவர்கள் உபதேசம் சொன்னால் காதில் வாங்க மாட்டார்கள். இதற்கு ஒரே வழி அவர்கள் போக்கிலேயே போவதுபோல் போய், மெள்ள மெள்ள நம் எண்ணத்தை சொன்னால் சற்றுக் கேட்பார்கள். உதாரணமாக ‘குரூப் ஸ்டடி’ பண்ணப்போகிறேன் என்று சொன்னால், `நல்லபடியாக போய் படித்து நல்ல மார்க் வாங்கும்மா’ என்று சொல்லலாம். ‘இரவு அதிக நேரம் எங்கேயும் தங்காதே... எனக்கு தனியே இருக்க பயம்’ என்று நாம் அவளை பெரிய துணையாக கருதுவதுபோல் காட்டிக்கொள்ளலாம். அப்படி சொல்வதால் உங்கள் எண்ணங்களை அவள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.
- திருமதி சுகந்தாராம், சென்னை-59