வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எழுத்துக்கள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை விடத் திரையில் தென்படும் அதே கதைகளும், கதை மாந்தர்களும் நம்மைக் கவர்ந்தும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சிலர் எழுத்துக்களாகப் படிக்கும் போது நிராகரிப்பதைச் சிலாகிக்க செய்யும் திரை ஓட்டம், அதற்கு மாற்றாகவும் கதையை ரசித்து திரைக்கதையை நிராகரிக்கச் செய்கிறது.
காண்பதிலும் படிப்பதிலும் ஒன்றிற்கு ஒன்று நிகராக இருக்கும் படங்கள் தான் விவாதத்தையும் மாற்றத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை. அத்தகு விவாதங்கள் புத்தகங்களை மையமாகக் கொண்டும் திரையிடும் சூழலில், பெருமளவில் விவாதங்கள் வெற்றிமாறன் திரைப்படங்களுக்கு எழும். அவை சமூக தீர்மானங்களை அரசின் கொள்கை சார் முடிவுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

வெற்றி மாறனைப் போலவே கார்த்தியும் தனது ஆவணப்படத்தால் இந்த சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். ஆஸ்கர் அகாடமி விருது வாங்குவதற்கு முன்பே தி எலபேண்ட் விஸ்பரர் என்ற ஆவணப்படம் பேசும் தலைப்பாக சமூக வலைத்தளங்களில் இருந்தது. தமிழ் இலக்கியங்களில் ‘யானை’களுக்கு என இருக்கின்ற சிறப்பிடம் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கின்றது.
சகாதேவன் எழுதிய ‘இந்திய யானைகளின் கதை’, ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’, சதாசிவம் எழுதிய ‘ஆதியில் யானைகள் இருந்தன’, தாமஸ் ட்ரவிட்மன் எழுதிய ‘யானைகளும் அரசர்களும்’ போன்ற புத்தகங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. அதே போன்று ஆங்கிலத்திலும் 1912ல் சாண்டர்சன் எழுதிய Thirteen Years among The Wild Beasts of India, 2009ல் லாரன்ஸ் அந்தோணி எழுதிய The Elephant Whisperer, ஆய்வு நூலான Right of Passage- Elephant Corridors of India, ஸ்டீபன் ஆல்டர் எழுதிய Feral Dreams போன்ற பல புத்தகங்கள் யானைகளில் பரிணாமத்தையும் மக்களுக்கும் யானைக்குமான தொடர்பினையும் சொல்லியுள்ளது.

நேர்மறையான கருத்துக்களை மட்டுமே முன்வைத்த இந்த ஆவணப்படம் யானைகளுக்கு நிகராக காட்டு நாயக்கர் சமூகத்தின் சமூகவியலையும் எடுத்துரைக்கும் வண்ணம் இருந்தது. ஆனால் அவர்களின் சூழலியல் மற்றும் பொதுச் சமூக சிக்கலையும் இந்த படம் கொஞ்சம் பேசியிருந்தால் அறமாக இருந்திருக்கக் கூடும். “சாதிச் சான்றிதழ் கேட்டு காட்டு நாயக்கர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை” என சில நாட்கள் செய்தித்தாள்களில் பார்க்கும் வாய்ப்புகள் நமக்கு இல்லாமல் இருந்ததில்லை.
பல விசயங்களை நேர்மறையான, பழங்குடியின மக்களின் குரலை தக்கவைத்துக்கொள்ளும் மற்ற, குறைவாகக் கொண்டாடப்படும் முயற்சிகளுடன் முற்றிலும் முரணாக உள்ளது. நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் நிவர்த்தி செய்யாமல் ஒரு சமூகத்தின் குரலை எந்த ஒரு கலைப்படைப்பினை அறத்துடன் நிலைநாட்டிவிட முடியாது.

கம்பீரமான யானைகள் நடமாடும் பசுமையான காடுகள் மற்றும் பசுமையான மலைகள் தனக்கான எல்லை வகுத்து பிறரை நெருங்கவிடாமல் வாழும் பெரும் பூனை இனங்களும், மனதை இலகுவாக்கும் பறவைகளும் மான்களும் இன்னும் சில காட்டுயிர்களுக்கு மத்தியில் பழங்குடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இது உலக வழக்கமாக இருந்தாலும், முதுமலை பகுதிகளில் காட்டு நாயக்கர்கள், இருளர்கள், குறும்பர்கள், மற்றும் பணியர்கள் போன்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். 39 நிமிடங்களில் யானைப் பாதுகாவலர்கள் பற்றியும், யானைகள் பற்றியும், காட்டு நாயக்கர் இனத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.
ஆவணப்படத்தின் ஆரம்பத்தில், பொம்மன் “நாங்கள் காட்டு நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்கள். காட்டு நாயக்கர் என்றால் காட்டுக்கே அரசர்கள்” என்பதை தங்களது தாய்மொழியில் கூறுகிறார். ஆரம்ப பகுதிகளிலிருந்த மொழி சுதந்திரம் கடைசி வரை நீளும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகப் போனது. சில நிமிடங்கள் கடந்ததும் தமிழில் உரையாடல் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர்.

MTR மற்றும் அதனை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகள் பழங்குடியினர் மக்கள் தொகையை முதன்மையாகக் கொண்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மலைத்தொடர்களில் இருப்பதால் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலிருந்து சொற்களைத் தொகுத்தும் திரிந்தும் வந்ததாக இருக்கக்கூடும். பழங்குடி மக்களின் கதையை விவரிக்க ஒரு பழங்குடி மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படம் ஜனரஞ்சக படங்களுக்கு அறிவுரை கூறுவதாகக் கருதியவை, எண்ணத்தோடு மட்டுமே சென்றதாக மாறிவிட்டது.
பொதுவாகவே, பெருங்கடவுள் வழிபாட்டைப் பழங்குடியினர் மேற்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு மாறாக, ஆரம்பத்திலே பொம்மன் பல இந்து தெய்வங்களை வழிபடுவதைக் காட்டுகிறது, அதற்கு அவரது வீட்டின் சுவர்களில் தொங்கிய கடவுள் படங்களே சாட்சி. தம்பதியினர் யானைக் குட்டி ரகுவை உள்ளூர் விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதும், அங்குப் பொம்மன் பூசாரியாக இருப்பதும் புதுமையாக இருந்தது.

பாரம்பரியமாக உருவ வழிபாட்டைப் பின்பற்றாமல் மூதாதையர் ஆவிகள், கற்கள், மரங்கள் போன்ற இயற்கையுடன் இணைந்ததை வைத்து வணங்கும் நீலகிரி பழங்குடியினர் ஜனவரி மாதத்தில் ஹபா போன்ற பெரும் திருவிழாக்களும் ஹெத்தன் என்ற மூதாதையர் கும்பிடும் சூழலில் இவை புதிதாக இருந்தது. வளர்ந்து வரும் சூழலில், பொதுச் சமூகங்கள் உடனான தொடர்புகள் அதிகம் பெற்றிருக்கும் சூழலில் பெரும் கடவுள்களின் தாக்கம் ஏற்பட்டு விட்டதா என்பதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.
‘காட்டுக்கு அரசர்கள்’ எனச்சொன்னாலும் “இது என் வீடு, நான் வசிக்கும் இடம், காட்டு விலங்குகள் சுதந்திரமாக நடமாடும் இடம்” எனப் பொம்மன் கூறினாலும் சூழலியல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் சில தடைகளையும், காடுகளில் வாழ்வதற்கான வழிமுறைகளையும் வழங்கும் வண்ணம் இருக்கிறது. இதன் வெளிப்பாடு பொம்மன் பெல்லியைப் போன்று மற்றவர்களால் வனாந்தரத்தில் நடக்க முடியாத சூழலில், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தாது கேள்விகளுடன் விடும் சூழலில், சில பழங்குடியின மக்கள் காட்டை விட்டு வெளியேறி வாழ்வாதாரத்தைத் தேடுகின்றனர்.

இன்னும் சிலர், நீலகிரி, வயநாடு மலைத்தொடர்களில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனைக் களைந்தெறியும் வண்ணம், அரசு அதிகாரிகள் அவர்களுடன் இணைந்து செயல்படும் சூழலில் பழங்குடியினரின் இயற்கை அறிவும் அதிகாரிகளின் படிப்பறிவும் கலந்த கொள்கைகளை வரைவு செய்து, இயற்கை பாதுகாப்பு, பழங்குடியினர்களின் பாரம்பரிய வாழ்க்கையில் 50% சதவீதஹ்தை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறேன்.
ரகு குட்டியாக இருந்த போதே தனது தாய் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இறந்ததால் தான் ரகு பொம்மன்-பெல்லியிடம் வந்தடைந்தார். உயர் அழுத்த மின் கம்பிகள் மூலம் அமைக்கப்படும் வேலிகளால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மற்றும் சட்டத்திற்கு எதிரான மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றது. பயிரைக் காப்பதாகக் கருதி யானையை அழைக்கும் செயல் சூழலியல் சக்கரத்தை உடைத்தெறியும் ஒன்று. கடந்த பத்தாண்டுகளில் முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டியுள்ள பகுதிகளில் 82 யானைகள் பையாக்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றது. காடுகள் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் பெரும் பங்கு இப்படிப் பலியாவதால் வெளியிலிருந்த எத்தகு கொள்கைகள் வகுத்தாலும் இயற்கையாக நடைக்கு மாற்றங்களைத் தவிர்க்க இயலாது.

விருதுகள் வந்த பிறகு, அந்த பகுதிகள் யானைகளைப் பார்த்துக்கொள்ளும் மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கு ₹9.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததோடு, பழங்குடியினத்தை சார்ந்த பேசப்படாத பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
இது பழங்குடி சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை உருவாக்குவது தீர்வாகுமா அல்லது பூர்வ குடிகளின் இடப்பெயர்ச்சிப் பிரச்சனையைப் பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் அழிக்குமா? போன்ற கேள்விகள் எழுப்பும் சூழலில் இதனைப் பேசாமல் கடந்தது ஆவணப்படத்தின் குறையாகப் பார்க்கிறேன். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸில்’ மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான காதல் போன்றது எதார்த்த வாழ்வில் கிடையாது.

அங்கு நிகழும் நிதர்சனங்கள் விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளால் சிக்கலானது. இதில் காலநிலை மாற்றத்தாலும், யானை வழித்தடங்களிலும், நீர்நிலைப் பகுதிகளில் வரும் தடைகள் போன்றவற்றால் சமதள மக்களுக்கு எழும் சிக்கலை விட பழங்குடியின வாழ்க்கை முறை சிக்கலானது. அவர்களின் தனித்துவமான மொழிகள், மதங்கள், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளைக் கொண்டுள்ளனர். இதழியலுக்கான அறம் அழகியலை முன்னிலைப்படுத்தியதால் குறைந்தும், பிரதான சிக்கல்களைப் பேசாது கடந்துள்ளது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.