
என் குருகிட்ட நாதஸ்வரம் கத்துக் கிட்டவங்கள்ல நான் மட்டும்தான் பொம்பள புள்ள. ஆரம்பத்துல எல்லாரும் வித்தியாசமா பார்த்தாங்க. ஆனா, அந்தப் பார்வையே ஒரு கட்டத்துல எனக்குப் பெருமையா மாறுச்சு
அளப்பரிய திறமை இருந்தும் சமூகத்தின் வெளிச்சம்படாமல், திறமைக்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர்கள் நம் சமூகத்தில் எத்தனையோ பேர் இருக் கிறார்கள். ஆனால், அது குறித்தெல்லாம் கவலைப்படாமல், தன் திறமை என்றாவது ஒருநாள் கொண்டாடப்படும் என்ற நம் பிக்கை மட்டுமே அவர்களிடம் இருக்கும். அவர்களில் ஒருவர்தான் நாதஸ்வரக் கலைஞர் வசந்தா. 45 ஆண்டுகளாக நாதஸ்வரக் கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டம், தூசி எனும் கிராமத்தில் இருக்கிறது அவரது வீடு. அடிப்படை வசதிகள்கூட இல்லாத அந்தச் சிறிய வீட்டில் தன் நாதஸ் வரத்துக்கு ஒய்யாரமாய் தனி இடம் அமைத்துப் பராமரிப்பதிலேயே தெரிகிறது அவரது கலைக்காதல்.
“தலைமுறை தலைமுறையா நாதஸ்வரம் வாசிக்குற குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எங்க அப்பா கண்ணன், நிறைய பேருக்கு குருவா இருந்து நாதஸ்வரம் வாசிக்கக் கத்துக் கொடுத்துருக்காரு. குடும்ப சூழல் காரணமா அஞ்சாவதோட என் படிப்பை நிறுத்திட்டாங்க. ஏதாவது சாதிக்கணும்ங்கிற ஆசையில 10 வயசுல எனக்கும் நாதஸ்வரம் சொல்லிக்கொடுங்கன்னு அப்பாகிட்ட கேட்டேன். ‘பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு’னு அப்பா மறுத்துட் டாரு. இதைத் தெரிஞ்சிகிட்ட என் பாட்டி, எங்க அப்பாவோட சிஷ்யர் கோவிந்தராஜ் கிட்ட நாதஸ்வரம் கத்துக்க சேர்த்து விட்டாங்க. அப்போ நாங்க திருமால்பூர்ல இருந்தோம். நாதஸ்வரம் கத்துக்கிறதுக்காக பெரும்புதூர் போனேன். பத்து வருஷங்கள் என்னோட குரு வீட்டுலயே தங்கி, வீட்டு வேலைகள் செஞ்சுதான் நாதஸ்வரம் கத்துக்கிட்டேன். பொம்பளப் புள்ளைய பத்து வருஷங்கள் தனியா விடுறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். என் ஆசைக்காக வீட்டுல சம்மதிச்சாங்க’’ - கனவை நனவாக்கிய மகிழ்ச்சித் தருணம் பகிர்ந்தபடி பேசுகிறார் வசந்தா.

‘’என் குருகிட்ட நாதஸ்வரம் கத்துக் கிட்டவங்கள்ல நான் மட்டும்தான் பொம்பள புள்ள. ஆரம்பத்துல எல்லாரும் வித்தியாசமா பார்த்தாங்க. ஆனா, அந்தப் பார்வையே ஒரு கட்டத்துல எனக்குப் பெருமையா மாறுச்சு. பயிற்சி முடிச்சு மேடை நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். அப்பாகூட சேர்ந்தும் வாசிக்க ஆரம்பிச்சேன். நான் அவர்கூட சேர்ந்து வாசிக்கும்போது சந்தோஷமும் பெருமையும் அவர் கண்ணுல தெரியும். 23 வயசுல நாதஸ் வரக் கலைஞரான ஞானப்பிரகாசத்தை கல் யாணம் பண்ணி வெச்சாங்க. வீட்டுக்காரர்கூட சேர்ந்தும் கச்சேரிகள் பண்ண ஆரம்பிச்சேன். பொதுவா பெரும்பாலான வேலைகள்ல ஆம்பளைங்களைவிட பொம்பளைங்களுக்கு கூலி குறைச்சலா இருக்கும். ஆனா, நாதஸ்வரக் கலையைப் பொறுத்தவரை பெண் கலைஞர் களுக்குத்தான் சம்பளம் அதிகம். நானும் என் வீட்டுக்காரரும் போனா, நான்தான் அதிக சம்பளம் வாங்குவேன். அதை அவரும் பெருமையா நினைப்பாரு. வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்த நேரம் திடீர்னு வீட்டுக்காரர் தவறிட்டாரு. அவரு சாகும்போது என் மகளுக்கு 14 வயசு. மகனுக்கு 11 வயசு. நாதஸ்வரம் வாசிச்சு தான் ரெண்டு பேரையும் படிக்க வெச்சேன்’’ - வைராக்கிய வசந்தா, இத்தனை வருடங்களில் 30,000 கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறார்.
‘`இப்போ நாதஸ்வரம் உட்பட எல்லா கலை களுக்கும் மக்கள்கிட்ட மவுசு குறைஞ்சு போச்சு. அதனால வாய்ப்புகளும் குறைஞ்சு போச்சு. நம்ம மண்ணோட இசைக்கும், கலைஞர்களுக்கும் சரியான மரியாதை கிடைக்கிறதில்ல. அதனால, நம்ம கலைகளைக் கத்துக்கிறவங்களும் குறைஞ்சு போயிட்டாங்க. கலைக்காக கலைஞர்கள் உயிரையும் கொடுப்போம். ஆனா, கலையைக் காப்பாத்தணும்னு கலைஞர்கள் மட்டும் நினைச்சா போதாதே” என்ற வசந்தாவின் கண்கள் கசிகின்றன.
“கொரோனா காலத்துல எத்தனையோ கலைஞர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டோம். இப்பவும் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழுற எத்தனையோ கலைஞர்கள் இருக் காங்க. ஆனா, அதையெல்லாம் நாங்க வெளியே காட்டிக்க மாட்டோம். இப்போகூட என் மகன் படிச்சு முடிச் சுட்டு, வேற வேலைக்குப் போகாம, தவில் கச்சேரி களுக்குப் போறாரு. எங் களைக் கொண்டாடணும்னு நாங்க எதிர்பார்க்கல. கலையை மதிச்சா போதும். எங்களோட அழுகை, சந்தோஷம், நம்பிக்கை, விடியல் எல்லாமே நாங்க உசுருக்கு உசுரா நேசிக்கிற இந்தக் கலைதான். மக்கள் மனசுவெச்சா, தலைமுறைகள் தாண்டியும் நம்ம கலைகள் வாழும்’’ - நெகிழ்ச்சியாகி விடை பெற்றார் வசந்தா.