கர்நாடகாவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக பேருந்தில் பணியிலிருந்த பெண் நடத்துனர் செய்த செயல் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.
நேற்று மதியம் 1:30 மணியளவில் பெங்களூர்-சிக்மகளூர் வழித்தடத்தில் உதயபுரா வேளாண்மைக் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.

அப்போது பேருந்தில் பணியிலிருந்த பெண் நடத்துனர் எஸ்.வசந்தம், உடனடியாக டிரைவரிடம் பேருந்தை ஓரமாக நிறுத்தச்சொல்லி பயணிகளை கீழிறக்கினார். அதோடு நடத்துனர் வசந்தம், பேருந்திலேயே குழந்தை பெற்றெடுக்க கர்ப்பிணிக்கு உதவினார்.
மேலும் பெண்ணின் நலிவடைந்த பொருளாதார நிலையை உணர்ந்த வசந்தம், பேருந்திலிருந்த பயணிகளிடமிருந்து 1,500 ரூபாய் வசூலித்து அவரிடம் கொடுத்தார். பின்னர் அந்தப் பெண் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தகிராம மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தேவையான சிகிச்சையளிக்கப்பட்டது.

தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். பெண் நடத்துனரின் இந்த உதவி மனப்பான்மை செயல் தெரியவந்தவுடன் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) நிர்வாக இயக்குநர் ஜி.சத்திவதி, வசந்தத்தைப் பாராட்டினார். வசந்தத்தின் செயல் குறித்து ஊடகத்திடம் பேசிய ஜி.சத்திவதி, ``சரியான நேரத்தில் தாய், குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதில் பெண் நடத்துனரின் மனிதாபிமான சேவை மிகவும் பாராட்டத்தக்கது" என்றார்.