வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வாழ்வில் சில பொருட்கள் சிலருக்கு அவர்தம் ஞாபக பெட்டகத்தில் நீங்க முடியாத நினைவுகளை நீண்ட காலம் தரும்.
சிலருக்கு அவர் காலம் உபயோகப்படுத்திய பேனா, சிலருக்கு முதன் முதலில் தாம் வாங்கிய மிதிவண்டி, நோட்டு புத்தகம், பத்திரிக்கையில் முதன் முதலாக வந்த படைப்பு இந்த வகையில் எனக்கு மறக்க முடியாத ஒன்றைப் பற்றி என் ஆழ்மனதில் புதைகொண்ட அதன் நினைவைப் பற்றி சிலாகிக்க சில நொடிகள்..
அன்றொரு நாள்..
ஒரு மதிய வேளை வீட்டின் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டிருந்தேன்.

சூரியன் உச்சியில் நின்று சீன தேசத்து சிறப்பு விலங்கு டிராகனைப் போன்று வெப்பத்தை என் பார்வை எங்கும் வீசிக் கொண்டிருந்தான்.
எங்கோ! ஒரு பாடல் என் செவி அறைக்குள் வந்து சிணுங்கியது..
"பூவரசம் பூ பூத்தாச்சு...
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு..."
இதுதான் அந்த பாடல் வரிகள் ..
என் சிந்தனை முழுக்க இப்போது பூவரச மரங்களின் மீது பதிய ஆரம்பித்தது..
பூவரசனின், பூவையர் சூடா பூவுக்கும்..
பூப்பெய்தும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?.
இந்த கேள்வியினூடே எனது சிந்தனை மொட்டுக்கள் சிறகடிக்க,
முன்னொரு நாள் எனது வீட்டின் கொல்லைப்புறத்தில் நிலை கொண்டிருந்த பூவரச மரத்துடனான எனது கடந்த கால நட்பினை நோக்கி எண்ணங்கள் விரிய சுவற்றோடு சாய்ந்து அதனை சிலாகிக்கிறேன்..
அவன் பூக்களின் அரசனோ?
பூவையர் நண்பனோ? தெரியவில்லை...
ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்வேன்
ஆம்!...
நான் மறந்த தோழன்..,
இல்லை, என்னால் மறக்கடிக்கப்பட்ட என்னினிய தோழன்..

ஆம், பல வருஷ விலகலுக்கு முன்னான அவனது நட்பை நினைந்தேன், மனதெங்கும் அவனது நினைவுகளால் நனைந்தேன்.
அவன் என் வீட்டு கொல்லையில் இருந்ததாலோ என்னவோ அவன் என்னிருதயத்தை கொள்ளை கொண்டானா?..
அது எனக்குத் தெரியவில்லை!!!
காலையில் நான் கண் விழித்து வீட்டின் கொல்லைப்புறம் வந்தால் வாயில் காப்போன் வரவேற்பதைப் போல் மெல்லிய காற்றில் குலுங்கும் அவனது இலைகளை அசைத்து என்னை வரவேற்பான்.
என் மேனியை தழுவும் காற்றானது, அவன் தனது இலைகளை விசிறி ஆக்கி எனக்கு விசுறுவதைப் போன்று இன்பமாக இருக்கும் அது அவன் என்னை ஆரத்தழுவி வரவேற்பதைப் போன்ற மென் சுகம் தரும், பெரும்பாலும் என் வீட்டு மின் விசிறி எந்தேகம் தீண்டியதை விட அவனது இலையை விசிறி யாக்கி எனக்குத் தரும் அந்த மெல்லிய காற்றானது மெல்லிய தென்றலாய் வந்து தீண்டுவது போல் அவ்வளவு சுகமளிக்கும்...

தீயென சுட்டெரிக்கும் வெயில் நேரங்களில் நிழல் தேடி அவனிடம் ஒதுங்கிய போதெல்லாம் மேலிருந்து விழும் பூவரசம் பூவானது அவன் தனது பூவிதழ் தந்தெனை வரவேற்பதாக தோணும்.
நான் பெரிதாக அவனுக்கு எப்போதும் நீராகாரம் எல்லாம் புசிக்கத் தந்ததில்லை, வீட்டின் சாரா துளையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாறை பாம்பைப் போன்று வளைந்து நெளிந்து செல்லும் ஓரிடத்தில் அவன் நிலை கொண்டிருந்தான் அந்த கழிவு நீரையே உண்டு வளர்ந்திருந்தான்.
ஒரு தினம் மழைநீர் என்னை நனைக்க அவனருகில் ஒதுங்கிய பொழுதில் அந்த கழிவுநீரை உண்டதையும் கடனென அவன் நினைந்து அவன் கிளைவழி யாக ஆனந்தக் கண்ணீரை நண்ணீராய் என் கன்னத்தில் காணிக்கையாய் சொறிந்தான்.
சிறு வயதில் நண்பர்களுடன் நான் கிரிக்கெட் விளையாடுவதற்காக தறிகெட்டு அவனின் கிளைகள் சிலவற்றை ஒடித்தேன் ஊண்ட வேண்டிய வெறும் மூன்று குச்சி ஸ்டம்புக்காக, இருந்தும் தனது இதழ்கள் சொரிந்து அவன் புன்னகையை பூக்களை சொரிவதன் மூலம் அனுமதித்தான்.

அவனது கிளைகளில் ஒன்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவதென்றால் அக்கம் பக்கம் உள்ள பெண்டிர்களுக்கு கொள்ளைப் பிரியம் ஆதலால் பண்டிகை நாட்கள் தோறும் பெருந்திரளான பெண்டிர்கள் ஊஞ்சலாட எம் வீட்டு கொல்லைக்கு வருவதுண்டு அவர்களை ஏமாற்றாது தமது உடலினைத் தானமாக்கி தூளியாய் தந்தான்.
என் பிள்ளைப் பருவத்தில் பீ..ப்..பீ ஊத வேண்டுமென விரும்பி அவனது இலை ஒன்றை நானொடிக்க, அவனோ! ஒருபோதும் இல்லை என்று சொல்லாமல் ஏராளம் இலைகள் தந்து எனக்கு பீ..ப்..பீ. வாசிக்க கற்றுக் கொடுத்தான்.
இப்படியே! என் கடந்த கால களிப்புகளில் காத தூரம் அவனே! தெரிகிறான்.
அவன் என் கண்முன்னே இருந்ததாலோ என்னவோ! அவனது கண்ணியம் எனக்கு தெரியவில்லை என இப்போது தோன்றுகிறது.
சில ஆண்டுகள் முன்பு குடியிருக்க வீடொன்று வேண்டி அவனை வெட்டி வெறும் விறகாக்கி என் வீட்டு அடுப்பிற்கு இரையாக்கினேன்.
இந்த துரோகியை நீங்கி போக அவன் கத்திய கதறலெல்லாம் கட்டதொர எனது காதில் விழவில்லையே! என்றே என் மனசு இப்போது கத்துகிறது.
அவனிருந்த இடமெல்லாம் இப்போது எனது நெஞ்சாங்கூட்டை விட்டு நீங்கியே போய்விட்டது, ஆனால் அவனை மட்டும் இப்போது நினைத்த மாத்திரத்தில் என்னுள்ளம் நனைந்து வியர்த்தது..
அவனை நான் மறந்து போனாலும் என்னால் அவனை மறக்க முடியவில்லை, !!!
என் பூவரசா.. எம் பூவ..ராசா....!
எண்ணமும். எழுத்தும்
பாகை இறையடியான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.