
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
தர்பூசணி தோசை... ஆஹா, என்ன சுவை!
மாக்டெய்ல் ஜூஸ்
தேவையானவை: கறுப்பு திராட்சை (விதையில்லாதது) - அரை கப், தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், பெரிய நெல்லிக்காய் - ஒன்று, சோற்றுக் கற்றாழை (வெள்ளைப் பகுதி) - கால் கப், மாதுளை முத்துக்கள் - அரை கப், புதினா இலைகள் - 5, இஞ்சி - சிறு துண்டு, சர்க்கரை - சிறிதளவு, தேன் - சிறிதளவு, துருவிய வெள்ளரிக்காய் - கால் கப்.

செய்முறை: தர்பூசணி, பெரிய நெல்லிக்காய் (கொட்டை நீக்கவும்), கறுப்பு திராட்சை, மாதுளை, சோற்றுக்கற்றாழை வெள்ளைப் பகுதி, புதினா இலைகள், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும். அதோடு, தேன், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மேலே துருவிய வெள்ளரி சேர்த்து அருந்தக் கொடுக்கவும்.
- பி.சந்திரகலா, பெரம்பூர்
கோதுமை ரவை - தர்பூசணி தோசை
தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: சம்பா கோதுமை ரவையை ஒன்றரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் அரிசி மாவு, கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் சற்றே கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
- செ.கலைவாணி, மேட்டூர் அணை
மாம்பழ பாத்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பழுத்த, இனிப்பான மாம்பழம் - ஒன்று, நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், சுண்டிய பால், மில்க்மெய்ட் - தேவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊறவைத்து, கொஞ்சம் குழைய வேகவைத்து ஆறவிடவும். மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, வடிகட்டி நார் நீக்கவும். அடிகனமான பாத்திரத்தில் மாம்பழ விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் சுண்டிய பால், மில்க்மெய்ட், குங்குமப்பூ கலந்து, சாதத்தை சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை கலந்து கலக்கவும் பிறகு பாலில் கரைத்த குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு உலர்ந்த திராட்சை, முந்திரியை வறுத்து, அதனை தூவி அலங்கரிக்கவும். கடாயில் மீதம் இருக்கும் உருகிய நெய்யை சேர்த்துக் கலக்கவும்.
- சித்ரா கோபிநாத், காரைக்கால்
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்