வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கோடை காலம் வந்துவிட்டது எங்கு பார்த்தாலும் நுங்கு, இளநீர் , தர்பூசணி, மாம்பழம்... இவற்றையெல்லாம் பார்த்ததும் சின்ன வயதில் அம்மா செய்துக் கொடுத்த இனிப்புகளுடன் கோடையை கொண்டாடிய ஞாபகம் நினைவுக்கு வந்தது.. அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து என் நினைவில் இருக்கும் சில கோடைகால ரெசிபிகள் இதோ.
தர்பூசணி டைமண்ட் நான்கு தர்பூசணி துண்டுகளின் தோல் விதைகளை நீக்கி சதைப்பகுதியை சின்ன சின்னத் துண்டுகளாக்கி மிக்ஸியில் 200 கிராம் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொண்டு இதனுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை கிலோ மைதா, உருக்கிய வெண்ணெய் 50 கிராம் இரண்டு டேபிள்ஸ்பூன் எள், சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொண்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து, சப்பாத்திகளாக தேய்த்து டைமண்ட் வடிவத்தில் வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தருவார்கள்.

சுவையில் அசத்தும் இந்த தர்பூசணி டைமண்ட்.
மாம்பழ கீர் கால் கப் பாஸ்மதி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு இனிப்பு மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கி இரண்டு கப் பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக வெந்து குழைந்ததும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கடைந்து வைத்துக்கொண்டு அதில் மாம்பழச் சாற்றை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். எல்லாம் நன்கு கலந்ததும் தேவையான சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி முந்திரி, பிஸ்தா பருப்பை நெய்யில் சீவி வறுத்து போட்டு இறக்கி இதை சூடாகவோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ சாப்பிடக்கொடுப்பார்கள். சுவையில் அசத்தும் இந்த மாம்பழகீர்.

அம்மா அடிக்கடி செய்யும் நுங்கு நீர் சூப்பரா இருக்கும்.
இளநூங்கு நான்கு எடுத்து தோல் உரித்து சர்க்கரை சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் ஒரு நிமிடம் அடித்துக் கொண்டு , இதனுடன் அரைக்கப் நீர் , கால் கப் தேங்காய் பால் , சில துளிகள் வெனிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஓட விட்டு குளிர வைத்து தருவார்கள் . அபாரமான ருசியில் அசத்தும் இந்த நுங்கு நீர்.
வெளியில் போய்விட்டு வந்தவுடன் அம்மா தரும் ஒரு பானம் பெயரெல்லாம் தெரியாது. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும் இஞ்சி சாறுடன், எலுமிச்சை சாறு , சிட்டிகை உப்பு தேவையான சர்க்கரை +இரண்டு கப் நீர் சேர்த்து கலந்து (அந்த நீரும் மண்பானை நீராக இருக்கும்( அதன் மேல் நான்கைந்து துளசி இலைகளை மிதக்க விட்டு குடிக்கத் தருவார்கள்.

சோர்வாவது ஒண்ணாவது.வெளியில் போய் வந்த களைப்பு போயே போய்விடும்.(இப்போதெல்லாம் நான் இதை தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறேன் தேவைப்படும்போது தேவையான நீர் சேர்த்து பரிமாறுகிறேன்) அதேபோல் அம்மா ஒரு கப் தர்ப்பூசணி பழ துண்டுகளுடன் கொஞ்சம் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கத் தருவார்கள் சுவையில் அசத்தும் இந்த பானம். அதேபோல்சிலநேரம் ஒரு டம்ளர் இளநீரில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிதளவு தேன் கலந்து தருவார்கள்.
இதையெல்லாம் சாப்பிட்டதனாலேயோ என்னவோ இரண்டு மாத கோடை இரண்டு நிமிடமாக பறந்து விட்டது... அந்தக் காலத்தில். இப்போது கோடையை நினைத்தாலே பயம் வருகிறது... பார்த்து பார்த்து செய்து கொடுக்க அம்மா இல்லையே?!
என்றென்றும் அன்புடன்
ஆதிரைவேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.