நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள நரிகுழியாடா பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாய கூலித்தொழிலாளியான இவர், சக தொழிலாளர்களுடன் அமர்ந்து மதியம் உணவருந்தியிருக்கிறார். அருகிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து பார்சல் வாங்கி வரப்பட்ட அந்த உணவில் பூரான் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த சக தொழிலாளர்களிடம் அதைக் காண்பித்திருக்கிறார். உணவில் பூரான் கிடைப்பதைக் கண்ட அவர்களுக்கு குமட்டல் ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

பூரான் கிடக்கும் உணவு பார்சலை எடுத்துக்கொண்டு உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். உணவக உரிமையாளரோ மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததாகத் தெரிகிறது. அதை செல்போனில் வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். உணவகத்துக்குச் சென்று ஆய்வுசெய்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ``முத்தோரை பாலாடா பகுதியிலுள்ள 'மம்மி மெஸ்' என்ற உணவகத்தில் நான்கு வெஜ் பிரியாணி பார்சல் வாங்கியிருக்கிறார்கள். ஓர் உணவு பார்சலில் பூரான் கிடந்திருக்கிறது.

உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறோம். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. உணவகத்தைத் தூய்மைப்படுத்தி, இது தொடர்பாக உரிய விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறோம்" என்றனர்.