
விசாலாட்சி இளையபெருமாள்
மைதாவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே கோதுமையைப் பயன்படுத்துகிறவர்கள் பலர் உண்டு. டயட், நீரிழிவுக் கட்டுப்பாட்டுக்கு நல்லது எனப் பலரும் கோதுமை உணவுகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். கோதுமை பூரி போன்ற பொரித்த உணவுகளை குழந்தைகளுக்காக வாரம் ஒருமுறையேனும் செய்கிறவர்களும் உண்டு. ஆனால், கோதுமையில் உள்ள க்ளூட்டன் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம், செரிமானக் கோளாறு போன்றவற்றுக்குக் காரணமாகும். இந்தச் சூழலில், என்ன செய்வது? கைகொடுக்கக் காத்திருக்கின்றன நம் பாரம்பர்ய சிறுதானியங்கள் மற்றும் பாசிப்பயறு, சோயா ஆகியவை. இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையும் வீடியோ இணைப்புகளும் சத்தும் சுவையும் கொண்ட புதுமையான `க்ளூட்டன் ஃப்ரீ' பூரி வகைகளை எளிதில் தயாரிக்க கைகொடுக்கும்!

கம்பு பூரி, சோளம் பூரி, கேப்பை (கேழ்வரகு) பூரி, தினை பூரி, சாமை பூரி, வரகு பூரி, பனிவரகு பூரி, பாசிப்பயறு (பச்சைப் பயறு) பூரி, குதிரைவாலி பூரி, ஓட்ஸ் பூரி, கொள்ளு பூரி / குலித்தாச்சி பாக்ரி, கினோவா பூரி, மிக்ஸ்டு நவ சிறுதானியம் பூரி, கோதுமை + ஓட்ஸ் + ஃப்ளாக் சீட்ஸ் (ஆளி விதை) மசாலா பூரி, ஓட்ஸ் மசாலா பூரி, குட்டு கி பூரி / பாப்பாரை பூரி, கம்பு வெந்தயக் கீரை பூரி, ராஜ்கிரா (தண்டுக்கீரை விதை) பூரி, சிங்காரா பூரி / வாட்டர் செஸ்நட் (Water Chestnut) பூரி.
மாவு பிசையும் முறை
அட்டவணையில் கொடுத்துள்ள மாவுடன் மசாலா வகைகள் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். ஒரு கப் மாவுக்கு அரை கப் முதல் முக்கால் கப் நீர் தேவைப்படும். மாவின் நீர் இழுக்கும் தன்மையைப் பொறுத்து மாறும். தண்ணீரை அளந்து குக்கரில் ஊற்றிக் கொதிக்கவிடவும். கலந்துவைத்துள்ள மாவைச் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் வேகமாகக் கிளறிவிட்டு மூடிவைக்கவும். கை பொறுக்கும் சூட்டுக்கு வந்தபின் மசித்துவைத்திருக்கும் உருளைக்கிழங்கு / கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். நீர் தேவைபட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளவும்.
மிஸ்ஸி பூரி, மக்கி கி பூரி, சோயா பூரி, மல்ட்டி கிரெய்ன் பூரி, உப்பவாஸ் பாஜ்னி பூரி, தாலிபீத் பராத்தா பூரி

மாவு பிசையும் முறை
அட்டவணையில் கொடுத்துள்ள மாவுடன் மசாலா வகைகள் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். மாவில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு / கோதுமை மாவு, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகச் சற்று வெதுவெதுப்பான நீர் தெளித்து மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும் வரை பிசையவும். எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து 10 நிமிடங்கள் மூடிவைத்து ஊறவிடவும்.
மலபார் நெய் பத்திரி / நெய்பத்தல், மங்களூர் காயி வடே
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை கொரகொரப்பாக அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு கப் மாவுக்கு அரை கப் முதல் முக்கால் கப் நீர் தேவைப்படும். மாவின் நீர் இழுக்கும் தன்மையைப் பொறுத்து மாறும். தண்ணீரை அளந்து குக்கரில் ஊற்றிக் கொதிக்கவிடவும். கலந்துவைத்துள்ள மாவைச் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் வேகமாகக் கிளறிவிட்டு மூடிவைக்கவும். கை பொறுக்கும் சூட்டுக்கு வந்தபின் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். நீர் தேவைபட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளவும்.

பூரி இடும் முறை

பிசைந்த மாவை ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு மாவை சின்னச் சின்ன சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். சப்பாத்தி கட்டை மற்றும் சப்பாத்தி குழவியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, ஓர் உருண்டையை எடுத்து சற்று கனமான பூரியாக இடவும். அல்லது ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி ஓர் உருண்டை மாவை எடுத்து விரல்களால் வட்டமாக பூரி வடிவத்தில் தட்டவும். இதற்குச் சற்று பயிற்சி தேவை.

பூரியை ஒரே சீரான திக்னெஸ்ஸில் இட வேண்டும். சில இடங்களில் மெலிசாகவும் சில இடங்களில் கனமாகவும் இருந்தால் பூரி உப்பி வராது. அது போலவே பூரியை ரொம்பவும் மெலிதாகத் தேய்த்தாலும் உப்பி வராது.

ஒரு வாணலியில் பூரியைப் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றவும். எண்ணெய் புகை வரும் அளவுக்கு சூடு ஏறக் கூடாது. எண்ணெயில் சிறிதளவு மாவைப் போட்டால் மாவு எண்ணெயில் கீழே போய் 2 முதல் 3 நொடிகள் கழித்து மேலே எழும்பி வர வேண்டும். இதுதான் எண்ணெயின் சரியான சூடு, பூரி சுட்டு எடுப்பதற்கு.

ஒரு பூரியை எண்ணெயில் போட்டுக் கரண்டியால் ஓரிரு நொடிகள் அமிழ்த்திவிடவும். இப்படிச் செய்தால் பூரி பொங்கி எழும்பி வரும். 15 முதல் 20 நொடிகள் கழித்து, பூரியைத் திருப்பிவிட்டு மேலும் அரை முதல் முக்கால் நிமிடம் வேகவைத்து அடுத்து எண்ணெயை வடியவிடவும்.

மிக்ஸ்டு நவ சிறுதானியம் பூரி மாவு செய்முறை

கொள்ளு, கேப்பை மற்றும் பாசிப்பயறு (பச்சைப் பயறு)... இவை மூன்றையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி, முளைகட்டவும். பிறகு இவற்றை வெயில்லில் நன்கு காயவைக்கவும். அனைத்துத் தானியங்களையும் ஒன்றுசேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்துப் பயன் படுத்திக் கொள்ளவும். இந்த மாவு மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.
மல்ட்டி கிரெய்ன் (Grain) பூரி மாவு செய்முறை

இந்த பூரி செய்வதற்கு தனித்தனி மாவுகளைச் சேர்த்துச் செய்யலாம். அல்லது சம பங்கு கோதுமை, சோயா, ஓட்ஸ், கடலைப்பருப்பு, தண்டுக்கீரை விதை, கேப்பை மற்றும் பார்லி இவற்றை ஒன்றுசேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ள வும். ஓட்ஸை மாத்திரம் வெறும் வாணலியில் வறுத்துச் சேர்க்கவும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்த மாவு மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு: ஃப்ளாக் சீட்ஸை பயன்படுத்தக் கூறிய ரெசிப்பி களில், அதை அவ்வப்போது மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துக் கொள்ளவும். முன்கூட்டியே அரைத்துவைத்தால் ஃப்ளாக் சீட்ஸ் ஆக்சிடைஸ் ஆகிவிடும்... ஆப்பிளை நறுக்கி வைப்பதுபோல்.
படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்