இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுசெய்து, அதன் முடிவுகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. 2018 - 2019 ஆண்டின் இந்த முடிவுகள், பல விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 12.7 சதவிகிதம், பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சித் தகவல்!
உணவு பாதுகாப்புக் குறைபாடு, கலப்படம் குறித்து ஏற்கெனவே ஜூவி-யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படிக்க, Also read-ஐ க்ளிக் செய்யவும்.
Also Read

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிகமான உணவு மாதிரிகளைப் பரிசோதித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டைவிட குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளின் சதவிகிதம் எல்லாமே இந்த ஆண்டு அதிகரித்திருந்தாலும், அதற்கு இணையாகக் கலப்படங்களும் அதிகரித்துக்கொண்டே வருவதைத்தான், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கலப்படம் உறுதிசெய்யப்பட்டால், குற்றத்துக்காக அபராதம் வசூலிக்கப்படும். அந்த வகையில், இந்தியா முழுவதும் இந்த ஆண்டு மட்டும் மொத்தமாக முப்பத்து இரண்டரைக் கோடிக்கும் அதிகமான அபராதத்தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. அபராதத் தொகை விகிதத்தைக் கணக்கிடுகையில், கடந்த ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவரிடம் பேசினோம். கமிஷனர் தான் இதைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்றவர், "தலைசிறந்த 7 மாநிலங்கள் வரிசையில் தமிழகத்துக்கு 4-வது இடம். தமிழகத்தில்தான் நிறைய அதிகாரிகள் இருக்காங்க. துறை நடவடிக்கைகளும் அதிகமா இருக்கு. அதனாலயே, நிறைய கலப்படங்களைக் கண்டறிந்தோம். அதன் விளைவாக இப்படி முடிவு வந்திருக்கலாம். மற்றபடி உணவு பாதுகாப்புக் குறைபாட்டில் தமிழகம்தான் முதலிடம் என்பதில்லை" என்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் அன்பழகனிடம் பேசினோம். "எந்த மாநிலம் முதலிடம்னு, ஆய்வு முடிவு அடிப்படையில சொல்லிட முடியாது. மத்திய அரசு, உணவு பாதுகாப்புக்கான ஆணையம் அமைச்சு செயல்படுது. தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களோட பங்கை செலுத்தினாத்தான் கலப்படமில்லாத உணவு சாத்தியமாகும்" என்றார்.

அதிகாரிகள் நேர்மையோடும், வியாபாரிகள் உண்மையோடும் இல்லாத பட்சத்தில், மக்கள் விழிப்புணர்வோடு இருந்துகொண்டால் கலப்படத்தைத் தவிர்க்கலாம். ஆரோக்கியமின்மையின் ஆபத்தான எதிர்காலத்தை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.