ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

ருசியான மொறுமொறு தோசை தயாரிக்க இதோ ஒரு எளிமையான ரெசிப்பி... ஒரு ஆழாக்கு ரவையை எடுத்து, அதே அளவு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து, ரவையைப் பிசிறி வையுங்கள். அரை ஆழாக்கு உளுத்தம் பருப்பை ஊறவையுங்கள். 20 நிமிடங்கள் ஊறியதும் மிக்ஸியில் அரைத்து, பிசிறி வைத்துள்ள ரவையுடன் கலந்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்து, தோசை சுட்டால் சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால், ரவையுடன் அரை ஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைக்கலாம்.
- பி.கவிதா, கோவிலாம்பூண்டி
மாங்காய்த் துண்டு்களின் மீது உப்பைத் தூவி சாப்பிடுவதற்குப் பதில், இரண்டு சிட்டிகை உப்பு கலந்த நீரில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, சில நொடிகள் கழித்து எடுத்து, நீரை உதறிவிட்டுச் சாப்பிட்டால்... துண்டுகளின் எல்லா பாகங்களிலும் உப்பு சீராகப் பரவி சுவை நன்றாக இருக்கும். வெள்ளரித் துண்டுகளைக்கூட இப்படி உப்பு நீரில் போட்டு சாப்பிடலாம்.
- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்
சப்பாத்தி செய்யும் சமயங்களில், இரண்டு சப்பாத்திகளுக்கான மாவைத் தனியே எடுத்து, அதில் சிறிதளவு பொடித்த ஓமம் கலந்து சப்பாத்திகளாக இட்டு, சிறு துண்டுகள் போட்டு, எண்ணெயில் பொரித்தால்... கோதுமை சிப்ஸ் தயார். இந்த சிப்ஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- எஸ்.சாய் தர்ஷினி, போரூர்

கீரை வகைகளை (குறிப்பாக முளைக்கீரை) சமைக்கும்போது, காரத்துக்கு மிளகாய் அல்லது மிளகாய்ப்பொடிக்கு பதில் மிளகுப்பொடி சேர்த்தால் சுவையும் அருமையாக இருக்கும்... கீரையும் எளிதில் ஜீரணமாகும். (விரும்பினால் 2 அல்லது 3 பல் பூண்டையும் நசுக்கி, தாளிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.)
- க.கலா, பந்தநல்லூர்.
பக்கோடா செய்யப் போகிறீர்களா? பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் அரை டீஸ்பூன் உப்பு கலந்து, பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். பிறகு அதில் தேவையான கடலை மாவும், ஒரு மேஜைக் கரண்டி காய்ச்சிய எண்ணெயும் ஊற்றிப் பிசைந்து பக்கோடா செய்தால் கரகரப்பாக இருப்பதுடன் வெகு நேரம் நமர்த்துப் போகாமலும் இருக்கும். தண்ணீரே சேர்க்க வேண்டாம்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

வெள்ளை நிற வாஷ்பேஸின், டைல்ஸ் முதலியவற்றை சுத்தம் செய்தபின், கடைசியாக சொட்டு நீலம் சில துளிகள் கலந்த நீரால் கழுவித் துடைத்துவிட்டால்... வெள்ளை நிறம் மங்கலாகத் தெரியாமல் பளீரிடும்.
- ஆர்.லலிதா, தென் எலப்பாக்கம்
அடை, தோசை, வடை, சப்பாத்தி முதலியவற்றைத் தயாரிக்கும்போது, மாவில் வெங்காயம், கேரட், முள்ளங்கி , பச்சை மிளகாய் போன்ற காய்களைத் துருவிச் சேர்க்கப் போகிறீர்களா? முதலில் வாணலியில் சில துளிகள் எண்ணெய் ஊற்றி, காய்களை ஓரிரு நிமிடங்கள் வதக்கிவிட்டுப் பின்னர் வதக்கிய காய்களை மாவில் சேர்த்தால், காய்கள் நறுக்கென்று வாயில் அகப்படாமல் மென்மையாக நன்கு வெந்து இருக்கும்.
- க.விஜயலெட்சுமி, திருச்சி

திடீர் விருந்தாளிகளுக்கும். கடவுளுக்குப் படைப்பதற்கும் ஈஸியான எமர்ஜென்ஸி பாயசம் தயாரிக்கலாம்... மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, சத்து மாவு இவற்றில் ஏதாவது ஒரு மாவை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டீஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவும் (சுமார் 23 நிமிடங்கள்.) அதிலேயே இரண்டு டம்ளர் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். 4 டீஸ்பூன் சர்க்கரையையும் அதில் சேர்க்கவும். பால் நுரைத்து வரும்போது அடுப்பை நிறுத்திவிடவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை உங்கள் விருப்பம்போல சேர்க்கவும்... சுவையான இன்ஸ்டன்ட் பாயசம் தயார்.
- ஜெ.ஐஸ்வர்யா, ஸ்ரீரங்கம்.
இட்லிக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் அல்லது பொடித்த மிளகு, கொத்தமல்லித் தழை இவற்றைச் சேர்த்துப் பிசைந்து (தேவையானால் சிறிது உப்பு சேர்த்து) போண்டா தயாரித்தால் மாலை நேர டிபன் கவலை தீர்ந்தது.
- ஆர்.பார்வதி, கொரட்டூர்.

பருப்பு வடை செய்யும் நாட்களில் பீன்ஸ், வாழைப்பூ, அவரைக்காய், கோஸ் போன்ற பொரியல்களில் ஒன்றைச் செய்து, அடுப்பிலிருந்து பொரியலை இறக்கும் முன், இரண்டு மூன்று வடைகளை உதிர்த்துப் போட்டு, 2 நிமிடங்கள் கிளறிவிட்டால், சுவையான உடனடி பருப்பு உசிலி தயார்.
- எஸ்.வெண்மதி, மயிலாப்பூர்