ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முள்ளங்கி ஒன்றைத் துருவி, அரை டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கிக்கொள்ளுங்கள். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது இந்தத் துருவலையும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியான, சத்துள்ள சப்பாத்திகள் ரெடி!
- பொன்னழகு தேனப்பன், மதுரை

இஞ்சியைத் தோல் நீக்கி துருவிக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, உப்பையும் இஞ்சித் துருவலையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள் (விரும்பினால் பூண்டு விழுதும் சேர்த்து வதக்கலாம்). அதில் சாதத்தை உதிர்த்துப் போட்டுக் கலந்தால், சுவையான இஞ்சி சாதம் தயார். மதியம், இரவு சாப்பிடத் துவங்கும் முன்பாக, கொஞ்சம் இஞ்சி சாதம் சாப்பிட்டு பாருங்கள்... உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகும்.
- பி.ஆஷா தேவி, முகப்பேர்
விசேஷ நாட்களில், விளக்கேற்றும்போது, எண்ணெயில் சில துளிகள் தேன் சேர்த்தால், விளக்கு நெடுநேரம் நின்று எரிவதோடு, பிரகாசமாகவும் எரியும்.
- மரகதம் சிம்ஹன், திருவல்லிக்கேணி

தயிர் வடை செய்ய உளுந்து ஊற வைக்கும்போது, கூடவே ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊறவைத்து அரையுங்கள். வடைகள் மெத்தென்று இருப்பதுடன், ருசியும் அருமையாக இருக்கும்.
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

உளுந்து வடை செய்யும்போது, ஒரு கைப்பிடி சேமியாவைத் தூள் செய்து, மாவில் சேர்த்து வடைகளைப் பொரித்தால், வடை மொறுமொறுவென்று இருக்கும்.
- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்
தயிர்ப்பச்சடி, அவியல் முதலியவற்றில் சேர்க்க கெட்டித் தயிர் தேவை. உங்களிடம் உள்ள தயிர் சக்கையும், தண்ணீருமாக இருக்கிறதா? ஒரு சுத்தமான மாவு சல்லடையை எடுத்து, தயிரை அதில் மெதுவாக ஊற்றுங்கள். நீர் மட்டும் சல்லடை வழியாக வெளியேற, கெட்டித் தயிர் மேலே தங்கிவிடும். சல்லடையைக் கவிழ்த்து கெட்டித் தயிரை எடுத்துக்கொள்ளலாம்.
- எஸ். ஈஸ்வரி, தேனி
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்