`என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை!' - சாலையோர மக்களின் பசி தீர்க்கும் `அறம்' சுதாகர்

உணவுப் பொட்டலத்தை அவர்களின் கையில் கொடுக்கும்போது, அவர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது பாருங்க... அதைப் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஏதோ பண்ணுச்சு சார்... அந்தப் போதைக்கு நிகரானது இந்த உலகத்தில எதுவுமே இல்லை...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சுதாகர் என்பவர். இவர், தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒரு நாள்கூட இடைவிடாமல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, வயதான முதியவர்களுக்கு, அநாதைகளாக ரோட்டில் உள்ளவர்களுக்கு என 50 பேருக்கு மதிய உணவு கொடுத்து வருகிறார். இவரின் இந்தச் செயலால் பலபேர் ஒரு வேளை உணவை நிம்மதியாக வயிறார சாப்பிடுகின்றனர்.

மதிய உணவு கொடுத்துவிட்டு வந்த சுதாகரிடம் பேசினோம். ``உடலில் ஆற்றல் இருக்கின்றவரை உழைக்கிறார்கள். பொருளீட்டும் வரை எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றன. வயதான பின் அவர்களுடைய பிள்ளைகளே அவர்களை பாரமாகக் கருதும் வேளையில், ஒருவேளை சோறு கிடைத்தாலே போதும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றவர்கள் ஏராளமானவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள்.
அவர்களை நாம் அன்றாடம் சந்தித்தாலும், அவர்களுக்காக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடிவதில்லை. மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிறோம். அதே போன்று ஏழைக் குழந்தைகள் ஒருவேளை உணவு கிடைத்தாலே போதும் என்ற நிலையில் ஏக்கத்துடன் வாழ்கிறார்கள். இதை என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.

சரி அவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும் ஒரு வேளை உணவாவது வாங்கிக் கொடுக்கலாமே என நினைத்து 2018 ஜனவரி 1-ம் தேதி அன்று வாங்கிக் கொடுத்தேன். உணவுப் பொட்டலத்தை அவர்களின் கையில் கொடுக்கும்போது, அவர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது பாருங்க... அதைப் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஏதோ பண்ணுச்சு சார்... அதன்பிறகு, அது அப்படியே தொடர்ந்தது.
அந்த மாதம் முழுவதும் கொடுத்துட்டேன். அதன் பிறகு என்னிடம் பணம் இல்லை. 50 பேருக்கு உணவு சமைக்க ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு ஆகிறது. அதனால், என்னுடைய `அறம் செய்வோம்’ அமைப்பு மூலம் என்னுடைய நண்பர்களிடம் உதவிகள் கேட்டேன். நண்பர்களும் உதவினார்கள். அதன் மூலமும் சில மாதங்கள் உணவு கொடுக்க முடிந்தது.

அதன் பிறகு அறம் செய்வோம் அமைப்பின் மூலம் வெளியில் உதவி கோரினோம். சிலர் அவர்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட தினங்களில் ஒருநாள் உணவுக்கான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனாலும், பெரிதாக உதவி கிடைக்கவில்லை என்றாலும் என்னால் முடிந்த அளவுக்கு இதைச் செய்து வருகிறேன்.
இதோ இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. மூன்றாவது வருடத்தை நோக்கிச் செல்கிறேன்” என்றவர், ``தற்போது உணவை என் மனைவியே சமைத்துத் தருவதால் குறைவான பொருள்செலவில் சமாளிக்க முடிகிறது. எந்த கஷ்டம் வந்தாலும் ஒருபோதும் உணவு தருவதை நிறுத்த மாட்டேன்” என்றார்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!