
மதராஸி தீபா
தங்கப்பால்
தேவை: தேங்காய்ப்பால் – 2 கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், மஞ்சள்கிழங்கு - சிறிதளவு, மிளகு – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – ஒரு சிறிய துண்டு, தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு.
செய்முறை:

தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மஞ்சள்கிழங்கு, பட்டை, மிளகு, ஏலக்காய், இஞ்சியை நன்கு தட்டி, அதைக் கொதிக்கும் தேங்காய்ப்பாலில் சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
மஞ்சள் பனங்கற்கண்டு பால்
தேவை: மஞ்சள்கிழங்கு – 30 - 50 கிராம், பால் – ஒரு லிட்டர், பனங்கற்கண்டு - அரை கப், மிளகு – 2 டீஸ்பூன்.
செய்முறை:

மஞ்சள்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மஞ்சளை குத்துரலில் போட்டு நசுக்கவும். இதனுடன் மிளகு சேர்த்து, தட்டி வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் காய்ந்ததும் தட்டிவைத்துள்ள மஞ்சள் - மிளகு கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு பனங்கற்கண்டைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பின்பு வடிகட்டி சூடாகவோ, மிதமான சூட்டிலோ விருப்பத்துக்கேற்ப பரிமாறவும்.
பால் சேர்க்காத மஞ்சள் டீ
தேவை: மஞ்சள்கிழங்கு - சிறிதளவு, ஏலக்காய் – 4, டீத்தூள் – கால் டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப்.
செய்முறை:

இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். மஞ்சள்கிழங்கு மற்றும் ஏலக்காயை நசுக்கி, அதில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். கொதித்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, டீத்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். தேன் அல்லது தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
பால் சேர்த்த மஞ்சள் டீ
தேவை: மஞ்சள்கிழங்கு – ஒரு டீஸ்பூன், பால் – அரை லிட்டர், சர்க்கரை – 5 டீஸ்பூன், டீத்தூள் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2.
செய்முறை:

மஞ்சள் துண்டு மற்றும் ஏலக்காயைத் தட்டி எடுத்துக்கொள்ளவும். பால் காய்ந்தபின், அத்துடன் தட்டிய மஞ்சள்கிழங்கு மற்றும் ஏலக்காய், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் டீத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பால் சேர்த்த மஞ்சள் டீ ரெடி.
மஞ்சள் லஸ்ஸி
தேவை: துருவிய மஞ்சள் – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒன்றரை கப், பால் – அரை கப், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.
செய்முறை:

துருவிய மஞ்சள், பால், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக்கொள்ளவும். அத்துடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் சிலுப்பிக்கொள்ளவும். மஞ்சள்கிழங்கு லஸ்ஸி ரெடி.
மஞ்சள் சோடா
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – 2 டேபிள்ஸ்பூன், பட்டை – 2 சிறிய துண்டு, தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன் சோடா – தேவையான அளவு.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றவும். பட்டை, மஞ்சள்கிழங்கு துருவல், இஞ்சி துண்டு சேர்த்துத் தட்டி, தண்ணீரில் போட்டு, மூடி போட்டு நன்கு கொதிக்கவிடவும். இத்துடன் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். பின்னர், அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். சூடு ஆறியவுடன், கால் பங்கு வடித்த கலவையுடன், முக்கால் பங்கு சோடா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
மஞ்சள் புரோக்கோலி சூப்
தேவை: புரோக்கோலி - ஒன்று (சிறிய பூக்களாக நறுக்கவும்), மஞ்சள்கிழங்கு - சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, பாதாம் – 15, பூண்டு – 5 பல், பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன் பால் – ஒரு கப், கான்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புரோக்கோலியை சுடுநீரில் போட்டு, வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடானதும் பெருஞ்சீரகம், புரோக்கோலி, மஞ்சள்கிழங்கு, பாதாம், வெங்காயம், பூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர்விட்டு விழுது போல் அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து, சூடாக்கி அரைத்த கலவையை ஊற்றி, பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்னர் கான்ஃப்ளார் மாவைத் தண்ணீருடன் கலந்து, கொதிக்கும் கலவையில் சேர்த்து கட்டி தட்டாமல், சூப் பதம் வரும் வரை மிதமான தீயில் வேகவிட்டு இறக்கவும். மஞ்சள் புரோக்கோலி சூப் ரெடி..
மஞ்சள் சாதம்
தேவை: துருவிய மஞ்சள் – கால் கப், பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப், பட்டை – 2 சிறிய துண்டு, கிராம்பு – 4, ஏலக்காய் – 3, பிரிஞ்சி இலை – 2, முந்திரி, உலர்திராட்சை – தலா 10, நெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

ஒரு குக்கரில் நெய்யைக் காயவைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் துருவிய மஞ்சள்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும். பின்னர் பாஸ்மதி அரிசி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்தபின் குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து மெதுவாகக் கிளறவும். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த மஞ்சள் சாதம் தாயார்.
மஞ்சள் சாஸ் பாஸ்தா
தேவை: மைதா மாவு – கால் கப், வேகவைத்த பாஸ்தா – 200 கிராம், மஞ்சள் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், சீஸ் – 20 கிராம், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி – 50 கிராம், சூக்கிணி (வெள்ளரி வகை), கேரட் – தலா ஒன்று, உப்பு – ஒன்றேகால் டீஸ்பூன்.
செய்முறை:

பூண்டு, வெங்காயம், கேரட்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சூக்கிணியையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சூடாக்கி வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக்கொள்ளவும். இதில் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, வேகவிடவும். தண்ணீர் நன்கு வற்றியபின், மைதா, சேர்த்து சில நொடிகள் வதக்கிக்கொள்ளவும். பிறகு பால், மஞ்சள் விழுது, மிளகுத்தூள், சர்க்கரை உப்பு, தண்ணீர் சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பின்னர் பாஸ்தாவை வேகவைத்த தண்ணீருடன் இதில் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, துருவிய சீஸ் தூவி இறக்கவும். மஞ்சள் சீஸ் பாஸ்தா ரெடி.
மஞ்சள் டிப்
தேவை: மஞ்சள்கிழங்கு - சிறிதளவு, தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 5 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:

மஞ்சள்கிழங்கு மற்றும் இஞ்சித் துண்டை நசுக்கிக்கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீரைச் சூடாக்கி, அதில் சர்க்கரை, நசுக்கிய மஞ்சள்கிழங்கு, இஞ்சி மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, பாகு பதம் வரும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும். பின்னர் உப்பு தூவி கலந்துவிட்டு, வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் டிப் ரெடி.
இதை சாலட், பிரெட் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
குளிர்கால ஸ்டூ
தேவை: வெங்காயம் – ஒன்று, பூண்டு – 7 பல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ - தலா 2, கேரட் – ஒன்று, புரோக்கோலி – பாதியளவு, சீனிக்கிழங்கு (சர்க்கரைவள்ளிக் கிழங்கு), உருளைக்கிழங்கு – தலா ஒன்று, மஞ்சள்கிழங்கு – 3 இன்ச் துண்டு, தேங்காய்ப்பால் – இரண்டே கால் கப், பச்சை மிளகாய் – ஒன்று, சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – ஒன்றேகால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:

வெங்காயம், பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கேரட், சீனிக்கிழங்கு, மஞ்சள்கிழங்கு, உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயைக் காயவைத்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கண்ணாடி போல வரும் வரை வதக்கிக்கொள்ளவும். கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் மற்றும் புரோக்கோலி துண்டுகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, 2 கப் தேங்காய்ப்பால் ஊற்றி, மூடி போட்டு, காய்கறிகளை வேகவிடவும். வெந்தபின் மீண்டும் கால் கப் தேங்காய்ப்பால் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.
மஞ்சள் புளிக்குழம்பு
தேவை: மஞ்சள்கிழங்கு – 20 கிராம், புளி – எலுமிச்சை அளவு, வெங்காயம் - ஒன்று, தக்காளி – ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், வெந்தயம் – ஒரு சிட்டிகை, பூண்டு - 7 பல், வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

வெங்காயம் மற்றும் மஞ்சள்கிழங்கைத் தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்னர் மஞ்சள் துண்டுகளைச் சேர்த்து, மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றி, நன்கு கொதிவந்தவுடன், குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்துவிட்டு, குழம்பை மிதமான தீயில் வேகவிடவும். எண்ணெய் தெளிந்து மேலே மிதந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கவும். மஞ்சள்கிழங்கு புளிக்குழம்பு ரெடி.
மஞ்சள்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – அரை கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பூண்டு – 4 பல் காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:

வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். வெந்தயக்கீரையைச் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துத் தாளித்துக்கொள்ளவும். அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் மஞ்சள்கிழங்கு துருவல், வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்தபின் தேங்காய்த் துருவல் சேர்த்து, உதிரியாக வரும் வரை வதக்கிக்கொள்ளவும். நன்கு வதங்கியபின் அடுப்பிலிருந்து இறக்கவும். மஞ்சள்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல் தயார்.
மஞ்சள் கருப்பட்டி குழிப்பணியாரம்
தேவை: துருவிய மஞ்சள் – 2 டேபிள்ஸ்பூன், புளித்த தோசை மாவு – ஒரு கப், கருப்பட்டி பாகு – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:

ஒரு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு துருவிய மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தோசை மாவு, ஏலக்காய்த்தூள், கருப்பட்டி பாகு, வறுத்த மஞ்சள் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில், ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் சேர்த்து, பணியார மாவை ஊற்றி, மூடி போட்டு வேகவிடவும். பின்னர் பணியாரத்தைத் திருப்பிவிட்டு சில நொடிகள் வேகவிடவும். இரண்டு பக்கமும் சிவக்க வெந்தவுடன் எடுக்கவும். மஞ்சள்கிழங்கு கருப்பட்டி குழிப்பணியாரம் ரெடி.
மஞ்சள் பூரண கொழுக்கட்டை
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு, அரிசி மாவு – ஒரு கப், உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைத் தளதளவெனக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து, சுடுநீரைச் சிறிது சிறிதாக ஊற்றி, ஸ்பூனால் கலந்து பிசைந்துகொள்ளவும். துருவிய மஞ்சள், தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் மாவைச் சிறு உருண்டையாக உருட்டி, அதனுள் பள்ளம் செய்து கொஞ்சம் மஞ்சள் - தேங்காய் கலவையை வைத்து, நன்றாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை ஆவியில் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் பூரண கொழுக்கட்டை ரெடி.
மஞ்சள் இலை கொழுக்கட்டை
தேவை: மஞ்சள் இலை – தேவையான அளவு, அரிசி மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், அரைத்த மஞ்சள் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:

2 மஞ்சள் இலைகளைத் தண்ணீரில் நன்றாகச் சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, சர்க்கரை, அரைத்த மஞ்சள் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரைத் தளதளவென கொதிக்கவிட்டு இறக்கவும். சுடுநீரை அரிசி மாவுக் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டி தட்டாமல் கலந்துகொள்ளவும். மஞ்சள் இலையில் நெய் தடவி, மாவை சிறிய உருண்டையாக எடுத்து, இலையின் நடுவில் வைத்து, விரல்களால் தட்டி நன்கு விரித்துக்கொள்ளவும். பின்னர் இலையை மூடி, 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். வேகவைக்கும் தண்ணீருடன் நறுக்கிய மஞ்சள் இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும். வெந்தபின் எடுத்துப் பரிமாறவும்.
மஞ்சள் கருப்பட்டி இடியாப்பம்
தேவை: மஞ்சள் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – ஒரு கப், கருப்பட்டி பாகு – அரை கப், உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

மஞ்சள்கிழங்குடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கருப்பட்டி பாகு, உப்பு, மஞ்சள் விழுது சேர்த்து, தேவையான சுடுநீரை சிறிது சிறிதாக ஊற்றி, ஸ்பூனால் கலந்து பிசைந்துகொள்ளவும். மாவை, இடியாப்பக் குழலில் வைத்து, இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும். மஞ்சள் கருப்பட்டி இடியாப்பம் தயார். இதைத் தேங்காய்த் துருவல் சேர்த்து அல்லது அப்படியே பரிமாறலாம்.
மஞ்சள் கேசரி
தேவை: துருவிய மஞ்சள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், ரவை – ஒரு கப், சர்க்கரை – அரை கப், நெய் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 10.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்துச் சூடாக்கி, அத்துடன் ரவை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வறுத்து, தட்டில் போட்டுக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் ரவைக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி, துருவிய மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்தபின் வறுத்து வைத்த ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். ரவை கெட்டியானவுடன் சர்க்கரை, சிறிதளவு நெய் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். பின்னர் இதை ரவையுடன் சேர்த்துக் கிளறவும். கேசரி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். மஞ்சள் கேசரி ரெடி.
மஞ்சள் தேங்காய் பர்ஃபி
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – கால் கப், துருவிய தேங்காய், சர்க்கரை – தலா முக்கால் கப், தண்ணீர் – கால் கப், முந்திரி – 10, நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, துருவிய தேங்காய் மற்றும் மஞ்சள்கிழங்கைச் சேர்த்து, ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளவும். அதில் உப்பு சேர்த்துக்கொள்ளவும். முந்திரியைச் சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கெட்டியான கம்பி பதம் வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கம்பி பதம் வந்தவுடன் வறுத்துவைத்த தேங்காய், மஞ்சள்கிழங்கு மற்றும் முந்திரி சேர்த்து சுருள வதக்கிக்கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி, சுருண்டுவந்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து, ஒரு ஸ்பூனைக் கொண்டு அழுத்திவிடவும். சிறிது நேரம் கழித்து, துண்டுகள் போட்டு ஆறியவுடன் பரிமாறவும்.
மஞ்சள் கத்லி
தேவை: முந்திரி – 200 கிராம், மஞ்சள் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், நெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை:

முந்திரியை நைஸ் பொடியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், மஞ்சள் விழுது சேர்த்து, கெட்டியான கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். கம்பி பதம் வந்தவுடன், அரைத்துவைத்த முந்திரிப் பொடியைச் சேர்த்து, சுருள வதக்கிக்கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி, முந்திரி விழுதைக் கொட்டி, ஸ்பூன் கொண்டு சமமாகப் பரப்பவும். சூடு ஆறியவுடன் துண்டுகளாக்கவும். மஞ்சள் கத்லி ரெடி.
மஞ்சள் கேக்
தேவை: மைதா – ஒரு கப், துருவிய மஞ்சள்கிழங்கு – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், சர்க்கரை – தலா முக்கால் கப், பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு கப், ஸ்பைஸ் பவுடர் (பட்டைத்தூள், ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, லவங்கப் பொடி) சரிபங்கு கலவை – ஒன்றரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு, ஆல் ஸ்பைஸ் பவுடர் சேர்த்துச் சலித்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகச் சர்க்கரை கரையும் வரை அடித்துக்கொள்ளவும். அவனை (oven) 180 டிகிரிக்கு பிரீஹீட் செய்யவும். துருவிய மஞ்சள்கிழங்கை, பால் கலவையுடன் சேர்த்துக் கலந்துவிடவும். மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகப் பால் கலவையுடன் கட்டி விழாமல் கலந்துகொள்ளவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி, மைதா தூவி எல்லா இடங்களிலும் டஸ்ட் செய்துகொள்ளவும். பின்னர் மாவுக் கலவையை, ட்ரேயில் ஊற்றி, அவனில் 8 முதல் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். மஞ்சள் கேக் தயார்.
மஞ்சள் சீனிக்கிழங்கு பான் கேக்
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வேகவைத்த சீனிக்கிழங்கு (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) – 2, மைதா – ஒரு கப், பால் – ஒரு கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – கால் டீஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:

வேகவைத்த சீனிக்கிழங்கைத் தோல் நீக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். அத்துடன் மைதா, உப்பு, பால், பேக்கிங் பவுடர், சமையல் சோடா, துருவிய மஞ்சள்கிழங்கு சேர்த்து, கட்டி தட்டாமல் ஊத்தப்பம் மாவுப் பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை விரிக்காமல் ஊற்றி, சுற்றிலும் வெண்ணெய்விட்டு, சில நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். மெதுவாக மறுபக்கம் திருப்பிப் போட்டு, சிறிது வெண்ணெய்விட்டு வேகவிட்டு இறக்கவும். சுவையான மஞ்சள் சீனிக்கிழங்கு பான் கேக் ரெடி. பான் கேக் மீது தேன் அல்லது கருப்பட்டி பாகு அல்லது வெல்லப்பாகு ஊற்றிப் பரிமாறவும்.
மஞ்சள் இட்லி
தேவை: இட்லி மாவு – 4 கப், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், துருவிய மஞ்சள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் இலை – தேவையான அளவு.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துருவிய இஞ்சி, துருவிய மஞ்சள் சேர்த்துத் தாளித்துக்கொள்ளவும். தாளித்த கலவையை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சிறிய கிண்ணம் அல்லது டம்ளரில் மஞ்சள் இலையை விரித்து, கலவையை அதனுள் ஊற்றி ஆவியில் வேகவிடவும். 3 மஞ்சள் இலைகளை நறுக்கி வேகவைக்கும் தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளவும். வெந்தபின் எடுத்தால் கிண்ணம்/டம்ளர் வடிவில் மஞ்சள் இலையுடன் இட்லி தயார்.
குறிப்பு: மஞ்சள் இலை கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். சாதாரண இட்லி தட்டிலேயே ஊற்றி வேகவிடலாம்.
மஞ்சள் ஊறுகாய்
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – ஒரு கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கல் உப்பு – கால் கப், நல்லெண்ணெய் – ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு – 3 டீஸ்பூன்.
செய்முறை:

வெந்தயத்தை வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, துருவிய மஞ்சள்கிழங்கு சேர்த்து, மிதமான தீயில் சில நொடிகள் வதக்கி எடுத்துக்கொள்ளவும். வதக்கியதை வாய் அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் அரைத்துவைத்த வெந்தயப் பொடி, கல் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சூடாக்கி கடுகு சேர்த்து நன்கு வெடிக்கவிட்டு, மஞ்சள் கலவையில் ஊற்றி, நன்றாகக் கிளறிவிடவும். மஞ்சள் ஊறுகாய் ரெடி. அதை ஓர் ஊறுகாய் ஜாடியில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: கைப்படாமல் பக்குவமாக வைத்திருந்தால் இந்த ஊறுகாய் ஒரு வருடத்துக்கு மேல் நன்றாக இருக்கும்.
கம்பு மஞ்சள் ரிப்பன் முறுக்கு
தேவை: கம்பு மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், சூடான எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், அரைத்த மஞ்சள் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சூடான எண்ணெய், அரைத்த மஞ்சள் விழுது சேர்த்து நன்றாக கைகளால் பிசிறிவிடவும். பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். முறுக்கு குழலில் எண்ணெய் தடவி, ரிப்பன் பக்கோடா பிழியும் அச்சு போடவும். மாவை முறுக்கு குழலில் போட்டு, எண்ணெய் நன்றாகக் காய்ந்தபின், அகலமாக விரித்துப் பிழியவும். ஒரு கரண்டியின் பின்புறம் கொண்டு மெதுவாக அழுத்திவிடவும். நன்கு வெந்தபின், எண்ணெயை வடித்து எடுத்துக்கொள்ளவும். ஆறிய பின்னர் காற்றுப்புகாத டப்பாவில் அடைக்கவும். மொறுமொறு கம்பு மஞ்சள் ரிப்பன் முறுக்கு ரெடி.
மஞ்சள் தேன்குழல்
தேவை: அரிசி மாவு – ஒரு கப், உளுந்து மாவு – கால் கப், கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், அரைத்த மஞ்சள் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில், அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய், கறுப்பு எள், அரைத்த மஞ்சள் விழுது சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கொள்ளவும். முறுக்கு குழலில் தேன்குழல் அச்சு போட்டு, நன்றாக அனைத்து இடத்திலும் எண்ணெய் தடவிக்கொள்ளவும். மாவை முறுக்கு குழலில் சேர்த்து, காய்ந்த எண்ணெயில் நேரடியாகப் பிழியவும். சிறு தீயில் நன்றாக வேகவிடவும், பின்னர் எண்ணெயை வடித்து எடுத்துக்கொள்ளவும். மொறுமொறு மஞ்சள் தேன்குழல் முறுக்கு ரெடி. சூடு ஆறியபின் காற்றுப்புகாத டப்பாவில் அடைக்கவும். ஒரு வாரத்துக்கு மேல் நன்றாக இருக்கும்.
மஞ்சள் புடிங்
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், அகர் அகர் – 10 கிராம், சர்க்கரை – அரை கப்.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, துருவிய மஞ்சள்கிழங்கு சேர்த்து மிருதுவாகும் வரை கொதிக்கவிடவும். அத்துடன் தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். அதில் அகர் அகர் சேர்த்து, நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். கரைந்தபின், அதை விருப்பத்துக்கேற்றவாறு கிளாஸ் அல்லது கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். சுவையான மஞ்சள்கிழங்கு புடிங் ரெடி. நன்கு ஆறியபின், அதை மெதுவாகத் தட்டில் கவிழ்த்து அல்லது அதே கிண்ணத்தில் பரிமாறலாம்.
மஞ்சள் ஐஸ்க்ரீம்
தேவை: மஞ்சள் விழுது – 4 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் – முக்கால் கப், கொழுப்பு நிறைந்த பால் – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப்.
செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். மஞ்சள் விழுது, ஒரு சிட்டிகை உப்பை பால் கலவையில் சேர்த்து, மிக்ஸியில் நுரைக்கும் வரை அடித்துக் கொள்ளவும். அடித்த கலவையை ஒரு காற்றுபுகாத டப்பாவில் ஊற்றி, 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து, மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் நுரைக்கும் வரை அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, 5 முதல் 6 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மஞ்சள் ஐஸ்க்ரீம் ரெடி.
மஞ்சள் எண்ணெய்
தேவை: துருவிய மஞ்சள்கிழங்கு – அரை கப், தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்.
செய்முறை:

தேங்காய் எண்ணெயை நன்றாகச் சூடாக்கிக்கொள்ளவும். துருவிய மஞ்சள்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் சூடான எண்ணெயை ஊற்றவும். சூடு நன்கு ஆறியதும், அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். மஞ்சள் எண்ணெய் தயார்.
குறிப்பு: தேவைக்கேற்ப சமையலில் பயன்படுத்தலாம். குளிர் காலங்களில் கை கால் மற்றும் முகத்தில் தேய்த்து 10 நிமிடத்துக்குப் பின் குளிர்ந்த நீரால் அலசி வந்தால் பனி பத்து, சரும வறட்சி நீங்கி சருமம் பொலிவாக இருக்கும்..
மஞ்சள் சேமிக்கும் முறைகள்

மஞ்சள்கிழங்கு மார்கழி, தை மாதங்களில்தான் அதிக அளவில் கிடைக்கும். அதை எப்படிச் சேமித்து வைப்பது?
* மஞ்சள் இலைகளை ஓர் ஈரத்துணியில் சுற்றிவைத்தால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை உலர்ந்து போகாமல் இருக்கும். ஈரத்துணியில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால், நான்கு அல்லது ஐந்து நாள்கள் வரை உலர்ந்து போகாமல் இருக்கும்.
* மஞ்சள் இலைகளை நிழலில் உலர்த்தி, பின்பு கைகளால் பொடித்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்துவைத்துக் கொள்ளலாம்.
* ஒரு பழைய பாத்திரத்தில் முக்கால் பகுதி மணல் நிரப்பி மஞ்சள்கிழங்கை அதன்மேல் பதித்து வைக்க, மாதக்கணக்கில் நன்றாக இருக்கும் (வாரம் ஒருமுறை சிறிது தண்ணீர் தெளிக்கலாம்).
* மஞ்சளை நன்கு அலசியபின் அப்படியே ஒரு காற்றுப்புகாத ஜிப்லாக் கவரில் அடைத்து ஃப்ரீசரில் சேமிக்க, வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
* மஞ்சளை நன்கு அலசியபின் தோல் சீவி சிறு துண்டுகளாகவோ, துருவியோ காற்றுப்புகாத ஜிப்லாக் கவரில் அடைத்து ஃப்ரீசரில் சேமிக்க, வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
* மஞ்சளை நன்கு அலசியபின் தோல் சீவி சிறு துண்டுகளாகவோ, துருவலாகவோ ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் சேமித்தால், இரண்டு வாரம்வரை கெடாமல் இருக்கும். ஆனால், மஞ்சளின் நிறம் சிவந்துகொண்டே போகும்.
மஞ்சள் உணவே வருக!

மஞ்சள் - கிட்டத்தட்ட அனைத்து இந்திய உணவிலும் சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள். சமைப்பதற்கு மட்டுமன்றி, பண்டிகை, விசேஷ நேரத்தில் பயன்படுத்த, அழகு, ஆரோக்கியத்தை மேம்படுத்த எனப் பல விதங்களில் மஞ்சளை நாம் உபயோகிக்கிறோம். மஞ்சளைத் தங்க மசாலா (Golden Spice) என்று கூறுவதன் காரணம், அதன் ஒளிரும் தங்கம் போன்ற நிறமே. மஞ்சளை அப்படியே கிழங்காகவோ, உலரவைத்தோ, பொடியாகவோ, நசுக்கியோ, சாறாகவோ பயன்படுத்தலாம். மஞ்சள்கிழங்கு மட்டுமின்றி அதன் தண்டு பகுதி, இலைகளையும்கூட உபயோகிக்கலாம். கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைத்து உண்ணும் உணவுகளை மஞ்சள் இலைகளில் சமைக்கலாம்.
மஞ்சளில் உள்ள `குர்குமின்' எனும் வேதிப்பொருள் வலி நிவாரணியாகவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் செரிமானத்துக்கும் உதவுகிறது. முக்கியமாக மஞ்சள் கேன்சர் வராமல் தடுக்க உதவிபுரிவதுடன், கேன்சர் அணுக்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. ஹார்மோன்களைச் சமச்சீராக வைத்துக்கொள்ள வும், கல்லீரலைச் சுத்தமாக்கவும் கைகொடுக்கிறது.
மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக விளங்கும் மஞ்சளைக்கொண்டு ஊறுகாய், புளிக்குழம்பு, பணியாரம், டீ, லஸ்ஸி, இடியாப்பம், கொழுக்கட்டை, பான் கேக், பாஸ்தா, புடிங், ஐஸ்க்ரீம் என இங்கே ஒரு `மஞ்சள் உணவு மேளா’வே நடத்தி அசத்துகிறார் சமையல் கலைஞர் மதராஸி தீபா (madraasi.com).