
ஸ்டார்சுஜிதா சென்
“சின்ன வயசுலேயே நடிகை ஆகணும்னு முடிவெடுத்துட்டேன். இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருந்தப்போ கல்லூரி நாடகக் குழுவுல சேர்ந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கினேன். ‘நடிப்பு தான் எனக்குக் கடைசிவரை துணை நிக்கணும், தப்பித்தவறிகூட ஐ.டி வேலையில் சேரக் கூடாது’னு வேண்டிக்குவேன். யதேச்சையா ஃபேஸ்புக்ல இருந்த என் புகைப்படங்களை இயக்குநர் சந்தீப்புக்கு அவருடைய நண்பர் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த சந்தீப் என்னை நேரா வரச்சொன்னார்.
என் ஆர்வத்தைப் பார்த்து நடிப்பு சம்பந்தமா நிறைய க்ளாஸ் எடுத்தார். அதுக்கப்புறம்தான் `அர்ஜுன் ரெட்டி' கதையையே சொன்னார். கேட்டதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ நாங்க எதிர்பார்த்ததைவிடவும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு இந்தப் படம்.

சினிமா என்பது பெரிய கனவு!
படத்துல நடிக்கப்போறதை என் அம்மா அப்பாகிட்ட சொன்னேன். கொஞ்சம்கூட யோசிக்காம நடிப்புக்குத் தடா போட்டுட்டாங்க. எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி ஹைதராபாத் துக்கு வந்தேன். சினிமாத் துறையில பொண்ணுங்க தனியா வளர்ந்து வர்றது ரொம்ப கஷ்டம். நமக்கு மேல உள்ளவங்க, நம்மகிட்ட அதிக உரிமை எடுத்துக்கிட்டு பர்சனலுக்குள்ள நுழையப் பார்ப்பாங்க. தவறா நடந்துக்க முயற்சி செய்வாங்க. என்கிட்டயும் சில பேர் அப்படி நடந்துக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அப்போ நான், ‘இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’னு ஸ்ட்ராங்கா சொல்லிடுவேன். ஆனா, சில பேருக்கு இந்த மாதிரியான சூழ்நிலை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கிடும். இதையெல்லாம் பார்த்தபோதுதான், `வீட்ல உள்ளவங்க ஏன் சினிமாத் துறையை நெனச்சு பயப்படுறாங்க'னு புரிஞ்சது. எனக்கு ஒரு பொண்ணு இருந்தாலும் நான் அவளை நடிக்கவிட்டிருக்க மாட்டேன். அதேநேரம் என் கனவும் முக்கியம்தானே? அதனால ரெண்டு வருஷமா வீட்டைவிட்டு வந்து தனியா இருக்கேன். எனக்குத் தேவையான விஷயங்களை நானே பார்த்துக்கிறேன். தினமும் வீட்டுக்கு போன் பண்ணி என்ன நடக்குதோ, அதை அப்படியே சொல்லிடுவேன்.
தெலுங்குல ஒரு வார்த்தைகூட தெரியாது!
நடிக்க ஆரம்பிச்சப்போ, எனக்கு தெலுங்குல ஒரு வார்த்தைகூடத் தெரியாது. பத்து நாள்லயே தெலுங்கை எப்படி உச்சரிக்கணும்னு கத்துக்கிட்டேன். அப்புறம், நான் ஜபல்பூரைத் தாண்டி எங்கேயும் போனது கிடையாது. இந்தப் படத்துக்காகத்தான் முதன்முதல்ல ஹைதராபாத் வந்தேன். இங்க இருக்குற நிறைய விஷயங்கள் புதுசா இருக்கு. குறிப்பா சாப்பாடும் மக்களும். இந்த உணர்வு ரொம்ப வித்தியாசமா இருந்ததுனால டிராவல் பண்ணணும் என்ற ஆசை எனக்கு வந்துருச்சு. இனி ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல ஊர் சுத்தக் கிளம்பிடுவேன்.
தமிழ் பேசப் போகிறேன்!
பஞ்சாபி மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனா, எந்த மொழியில நடிச்சாலும் நானே என் கேரக்டருக்கு டப்பிங் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னுடைய தெலுங்கு டப்பிங் கேட்ட நிறைய நண்பர்கள் ‘நல்லா உச்சரிச்சிருக்கீங்க’னு சொன்னாங்க. அதனால தமிழ் டப்பிங்கும் பண்ணணும்னு முடிவெடுத்து, தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்.
இன்பாக்ஸை நிரப்புவதே தமிழ் ரசிகர்கள்தான்!
தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்கள்ல மெசேஜ் பண்ணும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவங் களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... `என்னை ஒரு ஹீரோயினா பார்க்க வேண்டாம், உங்களில் ஒருத்தியா பாருங்க ப்ளீஸ்...' நானும் சாதாரண பின்னணியிலிருந்து வந்த பொண்ணுதான். அப்பா அரசாங்க ஊழியர், அம்மா இசை கல்லூரி ஆசிரியர், தங்கச்சி பி.காம் இரண்டாவது வருடம் படிச்சுட்டிருக்காங்க.
அடுத்த கட்டம்!
`100% லவ்' படத்தை தெலுங்குல பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. டாம் அண்டு ஜெர்ரி லவ் ரிலேஷன்ஷிப். அடுத்த படமான ‘மகாநதி’யில அப்படியே நேரெதிரான கேரக்டர். நடிகை சாவித்ரியோட வாழ்க்கை வரலாறுதான் படமே. அதுல கீர்த்தி சுரேஷுக்கு ஃப்ரெண்ட்டா நடிக்கிறேன். இந்தப் படம் மூலமா நடிப்பையும் தாண்டி எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு உருவாகியிருக்கு!”