உசிலம்பட்டி அருகே கருக்கலைப்பு செய்ய முயன்றபோது 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆண் குழந்தை கருவில் இருந்தது என தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரின் மனைவி ராமுத்தாய். இந்தத் தம்பதிக்கு 3 மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ராமுத்தாய் மீண்டும் கர்ப்பமானார். இதனிடையே, நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ என்று கருக்கலைப்பு செய்ய முற்பட்டார்கள் .
அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த ராமுத்தாய், கருவைக் கலைக்க தீர்க்கமாக முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தொட்டப்பநாயக்கணூரில் உள்ள செவிலியர் லட்சுமியின் உதவியை நாடியுள்ளார் ராமுத்தாய், கருவை கலைக்கும்படி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய் கிழமை ராமுத்தாயின் கருவை கலைக்க செவிலியர் லட்சுமி முயன்றார். அப்போது, தவறான சிகிச்சையால் ராமுத்தாய் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செவிலியர் லெட்சுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமுத்தாயின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், ராமுத்தாயின் வயிற்றில் இருந்த சிசு ஆண் குழந்தை என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை கேட்டு ராமுத்தாயின் கணவரும் உறவினர்களும் சோகத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டி, "அரசு மருத்துமனைகளில் உயர்தர வசதிகள் கொண்ட சிகிச்சை முறை இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் முறையாக அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அந்த பெண்ணின் அறியாமையால் அவரின் உயிரை தற்போது மாய்த்துகொண்டு இருப்பது வருந்தம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.