வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் இன்னும் நீடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. வரதட்சணையால் இதுவரை நிகழ்ந்த மரணங்கள் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, வரதட்சணை மரணங்கள் குறித்த தரவுகளைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதில், ``நாட்டில் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகி உள்ளன. நாள் ஒன்றுக்கு மட்டும் சுமார் 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தினமும் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டில் 7,466 மரணங்களும், 2018-ம் ஆண்டில் 7,167 மரணங்களும், 2019-ம் ஆண்டில் 7,141 மரணங்களும், 2020-ம் ஆண்டில் 6,753 மரணங்களும், 2021-ம் ஆண்டில் 6,753 மரணங்களும் பதிவாகி உள்ளன.

இந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகி உள்ளன. இதேபோல 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை பீகாரில் 5,354 வரதட்சணை மரணங்கள், மத்தியப்பிரதேசத்தில் 2,859; மேற்கு வங்கத்தில் 2,389; ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் பதிவாகி உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள இந்த தரவுகள் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிப்பதாக உள்ளது. என்னதான் பெண்கள் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டார்கள் என்று நாம் கூறிக் கொண்டாலும், நாட்டில் வரதட்சணை மரணங்கள் இன்னமும் தொடர்வது அவமானத்துக்குரிய ஒன்று.