ம.பிரியதர்ஷினி
''என்னோட ஃபேஸ்புக் பேஜ்ல, சமீபத்துல அம்மாக்களால் ஹிட் அடிச்ச அந்த 'போஸ்ட்’டுக்கு, எஸ்.பி.பி. சார்தான் காரணம். ஏன்னா... சார் அனுப்பின ஒரு மெயில் செய்தியைத்தான், போஸ்ட் டிங்கா நான் போட்டிருந்தேன்!''
- உற்சாகமாகச் சொல்கிறார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

''எஸ்.பி.பி. சார், 'இந்த தகவல் ரொம்ப உபயோகமா இருக்கிறதா நினைக்கிறேன். நீங்க இதை மக்களுக்கு தெரியப்படுத்துங்க’னு சொல்லி இருந்தார்.
அது என்னன்னா... அறிமுகமில்லாத ஒரு நபர், எட்டு வயசு பெண் குழந்தையைக் கடத்த திட்டம் போட்டு, 'உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால உன்னைக் கூப்பிட்டு வர என்னை அனுப்பினாங்க. வா வீட்டுக்குப் போகலாம்’னு பள்ளிக்கூடத்துல வந்து கூப்பிடறார். உடனே அந்தப் பொண்ணு, 'பாஸ்வேர்டு சொல்லுங்க!’னு கேட்கறா. அந்த ஆள் குழம்பி... மிரண்டு... வந்த வழியே போயிடுறான். அந்தப் பொண்ணோட அம்மா, அவளுக்கு ஒரு பாஸ்வேர்டு சொல்லிக் கொடுத்து, 'வீட்டில் இருந்து அனுப்பினதா யாராவது உன்னை வந்து கூப்பிட்டா, இந்த பாஸ்வேர்டை கேட்டு செக் பண்ணிக்கோ!’னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால நீங்களும் குழந்தைகளுக்கு பாஸ்வேர்டு பழக்கத்தைக் கொண்டு வாங்க!’ங்கறதுதான் சாரோட மெயில்.

எளிமையான, ஆனா வலிமையான பாதுகாப்பான நடவடிக்கை இது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கைனு ஒவ்வொரு குடும்பமும் அவங்களுக்கு மட்டுமே தெரியுற ஒரு பாஸ்வேர்டு வெச்சுக்கலாம். பள்ளி, டியூஷன், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி வகுப்புகள்னு குழந்தைகளை எட்டு திசைகளுக்கும் அனுப்பும் காலம் இது. எங்கேயும், எப்பவும் தவறு நேர்ந்திடாம இருக்க, இந்த பாஸ்வேர்டு கவசமா இருக்கும். கணவன் பெயரைச் சொல்லி, 'ஏ.சி.சர்வீஸ்', 'டெலிபோன் சர்வீஸ்'னு வீட்டுக்குள் நுழையப் பார்த்தாலும், மனைவி கேட்கலாம் பாஸ்வேர்டு. இதை குடும்ப உறுப்பினர்களுக்குள்ள ரகசியமா வெச்சுக்கணும். ஒரு தடவை பயன்படுத்திட்டா... மாத்திடணும்.
என் ஃபேஸ்புக் பக்கத்துல பார்த்துட்டு, பெண்கள் தரப்பில் இருந்து ஏகப்பட்ட லைக்ஸ், ஷேர்ஸ். 'எங்க குழந்தைக்கு உடனே பாஸ்வேர்டு சொல்லிக் கொடுத்துடறோம்’னு நன்றியும் சொன்னாங்க. தேங்க்ஸ் டு எஸ்.பி.பி. சார்!'' என்றார் ஜேம்ஸ் வசந்தன்.
என்ன குடும்ப பாஸ்வேர்டு ரெடிதானே!