கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமன்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள்.
திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இந்தத் திருவிழா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில், முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் திருவிழா, இன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி நடத்தப்படும் திருநங்கைகளுக்கான `மிஸ் கூவாகம்' அழகிப்போட்டி, நேற்றைய தினம் (01.05.2023) விழுப்புரத்தில் துவங்கியது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் முதல் சுற்று, நேற்று காலை நடைபெற்றது. இதில், சுமார் 45 திருநங்கைகள் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட நிலையில், 16 திருநங்கைகள் இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில், 'மிஸ் கூவாகம்- 2023' திருநங்கையரை தேர்வு செய்யும் போட்டி நேற்று மாலை, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், எம்.பி கௌதம சிகாமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, லேசாக பெய்து கொண்டிருந்த சாரல் மழை, திடீரென கனமழையாக பொழிந்தது. இதனால், 'மிஸ் கூவாகம் - 2023' அழகியை தேர்வு செய்யும் நிகழ்ச்சி பாதியிலேயே தடைபட்டது. இதன் காரணமாக மிகுந்த வருத்தமடைந்த திருநங்கைகள் கூட்டமைப்பினர், தடைபட்ட நிகழ்ச்சி இன்று (02.05.2023) விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவித்தனர். அதன்படி, இன்று காலை 'மிஸ் கூவாகம் -2023' நிகழ்ச்சி துவங்கியது. அதில், 7 திருநங்கைகள் மட்டும் இறுதி சுற்றிற்கு தேர்வாகினர். பின்னணி இசை இசைக்கப்பட, ஒருவரை தொடர்ந்து மற்றொருவர் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
அவர்களிடம் பொது அறிவுத்திறன் குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டது. இதில், மிகவும் சிறப்பாகப் பதில் அளித்த சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா, 'மிஸ் கூவாகம் - 2023' அழகி பட்டத்தை வென்றார்.
மேலும், சென்னையை சேர்ந்த டிஷா இரண்டாவது இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாதனா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றியாளர்கள் தங்களின் அலாதியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பார்வையாளர்களும், சக போட்டியாளர்களும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக, கடந்த 30-ம் தேதி, இதே விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற ’மிஸ் கூவாகம் - 2023’ (சென்னை குழு) நிகழ்ச்சியில், மிஸ் சென்னை திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்வு செய்யப்பட்டார்.