சினிமா
Published:Updated:

துயர்களை வென்ற மனுஷி!

உமா பிரேமன்
பிரீமியம் ஸ்டோரி
News
உமா பிரேமன்

கோவை மாவட்டம், சிந்தாமணிப்புதூரில் பிறந்தவர், உமா பிரேமன்.

‘வீடில்லா மக்களின் துயர், வானமும் பூமியும் வஞ்சிக்கும் வாழ்வு. அப்படியான மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதே, இப்போதைய என் முனைப்பு” - அக்கறை தொனிக்கப் பேசுகிறார் உமா பிரேமன்.

கோவை மாவட்டம், சிந்தாமணிப்புதூரில் பிறந்தவர், உமா பிரேமன். 22 வருடங்களுக்கு முன் ‘சாந்தி மெடிக்கல் இன்ஃபர்மேஷன் சென்டரை’ தொடங்கி, பல நோயாளிகளுக்கு உதவி செய்து வருபவர். அவருடைய மையத்தின் சார்பில் இதுவரை 2,00,000 டயாலிசிஸ், 20,500 இதய அறுவை சிகிச்சைகள், 650 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, வீடில்லாதவர்களுக்குச் சிறிய பட்ஜெட்டில் இலவச வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இதைத்தாண்டியும் இவரைப் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அவரின் வாழ்க்கை ‘கதை கேட்கும் சுவர்கள்’ என்ற பெயரில் புத்தகமாகியிருக்கிறது. துயரங்கள் மட்டுமே பொதிந்த கதை அது. உமாவின் எட்டாவது வயதில் அவரின் தாய் ஒருவருடன் சென்றுவிட, வீட்டையும் அப்பாவையும் கவனிக்கும் பொறுப்பு உமாவின் மீது விழுந்தது. உறவினர்களின் கட்டாயத்தால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் உமாவின் அப்பா. உமாவை ஆற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்யும் முயற்சிவரை தொடர்ந்தன சித்தியின் கொடுமைகள்.

துயர்களை வென்ற மனுஷி!
துயர்களை வென்ற மனுஷி!

சில ஆண்டுகளுக்குப் பின் உமாவின் முன் வந்து நின்றார் அம்மா. மகளைச் சட்டரீதியாகத் தன்னுடன் அழைத்துச் சென்றவர், தன் காதலன் ஒருவனிடம் 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார். அந்த நபர் உமாவை மும்பைக்குப் பாலியல் தொழில் செய்ய அழைத்துச் செல்ல, அங்கிருந்து அவர் தப்ப ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது இன்னொரு சிறை என்பதைக் காலம் உணர்த்தியது. உமாவைப் பாலியல் தொழிலுக்காக அழைத்துச் சென்ற நபருக்கு 50,000 ரூபாய் கொடுத்து உமாவை மீட்டார் பிரேமன். அதனாலேயே தன்னைவிட 24 வயது மூத்த பிரேமனுக்கு நான்காவது மனைவியானார் உமா.

குடிப்பழக்கத்தால் காசநோய் பாதித்து கணவர் இறந்தபோது, உமாவின் வயது வெறும் 26. அதன் பின்னர், கையில் குழந்தையுடன், சமூக சேவைக்குள் அடியெடுத்து வைத்தார் உமா பிரேமன். காலங்கள் உருண்டோட, இன்று ஆலமர விருட்சமாக நின்று பலருக்கும் நிழல் தருகிறார். ‘இந்தியாவின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றிருக்கிறார்.

முதலும் கடைசியுமாக நாங்கள் அதிக நேரம் பேசியது அந்தப் பயணத்தில்தான். இந்த ஆபரேஷனில் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

“என் அம்மா தற்போது லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே வசிக்கிறார். இந்த 69 வயதிலும் அவருக்குப் பிடித்த வாழ்க்கையை, அவருக்காக மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். என் புத்தகம் வெளியானபோது, தனக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்று, நான் எழுதியிருப்பது எதுவுமே உண்மையில்லை என்றார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் அம்மாவைப் பற்றி நான் எழுதாத விஷயங்களே அதிகம். ஆயினும், என் மகனிடம் அவர் பேசுவதைத் தடுக்காமல்தான் இருந்தேன். ஆனால், ‘அவர் எதுவும் உனக்கு வாங்கிக்கொடுக்கக்கூடாது. என்னை விற்ற 25,000 ரூபாய் பணமும் அதில் கலந்திருக்கலாம்’ என்று அவனிடம் கூறினேன். இப்போது அவர் என் மகனுடனும் பேசுவதில்லை” எனும் உமா,“என்னை ஆற்றில் தள்ளிக் கொல்லப்பார்த்த என் சித்தியை இப்போதும் நான் போய்ப் பார்க்கிறேன். என்னைக் கட்டிப்பிடிப்பார், முத்தம் கொடுப்பார். அவருக்குள் இன்னும் அந்தக் குற்றவுணர்ச்சி இருக்கிறது என்றாலும், தன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அந்தக் குற்றங்களைச் செய்த அம்மாவாக, அவரை என்னால் மன்னிக்க முடிந்தது” என்று சொல்லும் உமாவின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது, பள்ளிப் படிப்பை முடித்த காலகட்டத்தில் அவர் அன்னை தெரசாவைப் பார்க்க நேர்ந்ததுதான். இந்த உலகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விதை அவருக்குள் விழுந்தது அப்போதுதான். ஆனால், அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறார் அவர் கணவர் பிரேமன்.

“என்னை 50,000 ரூபாய்க்கு வாங்கிய பிரேமன், என் கன்னித்தன்மையைச் சோதிக்க மருத்துவரிடம் அவர் என்னை அழைத்துச் சென்ற நாளில், இனி இந்த உலகில் நான் அனுபவிக்கவேண்டிய துயர் ஒன்றும் இல்லை எனத் தோன்றியது. நான் உயிர் உள்ள மனுஷி, எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் விருப்பத்துக்கு நான் வாழ வேண்டும்; வாழ்ந்தேன். ‘இவர் இறந்துபோய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்றும், ‘ஏதாவதொரு விபத்தில் நான் இறந்துபோய்விட்டால் நிம்மதி’ என்றும் தோன்றும் அளவுக்கு, நரகமான வாழ்க்கை அது’’ என்பவர், இன்றும் அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டிருப்பது ஏன்? ஒரு சிறுகதைபோல, அவர்கள் வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்தைப் பகிர்ந்தார் உமா.

“காசநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன். 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 25-ம் தேதி, ரயில் பயணம் அது. முதலும் கடைசியுமாக நாங்கள் அதிக நேரம் பேசியது அந்தப் பயணத்தில்தான். ‘இந்த ஆபரேஷனில் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இறந்த பிறகு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்வாயா? உன்னை இன்னொருவனின் மனைவியாக என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை’ என்றார். அதிகாரத்தை மட்டுமே வெளிப்படுத்தியவரின் வார்த்தைகளில் அன்றுதான் முதன்முதலாக அன்பு தென்பட்டது. ‘இந்தப் பிரியத்தை ஏழு ஆண்டுகளில் ஒருமுறையாவது என்னிடம் காட்டியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டேன். ‘நீ என்னிடம் பயத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டதால், எனக்கு வேண்டியது எல்லாமே கிடைத்தது. பிறகு ஏன் நான் என் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார்.

உமா பிரேமன்
உமா பிரேமன்

அப்போதுதான், மருத்துவ சேவைக்காக ஒரு மெடிக்கல் இன்ஃபர்மேஷன் சென்டர் தொடங்க வேண்டும் என்ற என் ஆசையைச் சொன்னேன். அந்தப் பயணத்தில்தான் முதன்முறையாக என் கையைப் பிரியத்தோடு பற்றினார். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பாதுகாப்பை உணர்ந்தேன். மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால் அவர் உயிரோடு வீடு திரும்பவில்லை. பிரேமனின் மனைவியாக என்னை உணர ஆரம்பித்து 24 மணி நேரம் ஆவதற்குள், அவர் எனக்கில்லாமல் போய்விட்டார். ஆனாலும், அந்த ஒரு நாள் அவரை நேசித்த அளவுக்கு, இன்றுவரை என்னால் யாரையும் நேசிக்கமுடியவில்லை. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 49. இப்போது எனக்கு வயது 49. நேற்றுகூட அவருடைய போட்டோவைப் பார்த்து, ‘இப்போது நம் இருவருக்கும் ஒரே வயது. வாடா, போடா என்றுகூடக் கூப்பிடலாம்’ என்று பேசிக்கொண்டிருந்தேன்’’ என்று சிரிக்கிறார் உமா.

சுவர்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த உமாவின் கதையை இன்று உலகம் படிக்கத் தொடங்கியிருக்கிறது. அது அதிகாரத்தின் கறை படிந்த பல சுவர்களைத் தகர்த்தெறியட்டும்!