விகடன் வரவேற்பறை
ஒளியிலே தெரிவது - வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், பு.எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83
பக்கங்கள்: 160 விலை:

100

தமிழின் மூத்த எழுத்தாளர் வண்ணதாசன் பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. மனித மனத்தின் வெவ்வேறு விசித்திரமான மனநிலைகளைப் பதிவு செய்வதாகவே பெரும்பாலான கதைகள் உள்ளன. குறிப்பாக, 'சிநேகிதிகள்’ சிறுகதை... திருமணத்துக்கு அப்பாலான உறவில் உள்ள புரிபடாத இழையை நுட்பமாக எழுதிச் செல்கிறது. 'இமயமலையும் அரபிக்கடலும்’ கதை, தந்தை இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சிறுமியின் வாழ்க்கைப் பதிவுகளை அழகியலுடன் பிரதிபலிக்கிறது. மனிதர்களின் வெவ்வேறு வாழ்க்கை முறைகளை அவர்களது இயல்பான குணங்களுடன் உள்வாங்கிக்கொண்டு, நல்லவர்-கெட்டவர் என்று கறுப்பு-வெள்ளையாகப் பிரிக்காமல் சொல்வது இந்தத் தொகுப்பின் பலம்!
ஒரு சோறு! http://www.help-the-hungry.org/index.php

'உங்கள் குழந்தை பசியினால் வாடினால்...’ இந்த வாசகத்தோடு வரவேற்கிறது இத் தளம். பாதிக்கப்பட்டோருக்கு எந்த மாதிரியான உதவிகள் செய்யலாம் என்பதை விலாவாரியாக விளக்குகிறது. இந்தியா முழுக்க இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஒரு நேரப் பசியைப் போக்க நினைக்கும் நல்ல உள்ளங்கள் அவசியம் க்ளிக்க வேண்டிய தளம்!

மனிதனுக்காக... மனிதனால்! http://thikasi.blogspot.com/
மார்க்சியத் திறனாய்வாளரும் இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தி.க.சிவசங்கரனின் வலைப்பூ. கட்டுரைகள், நிகழ்வுகள் சார்ந்த பதிவுகள், கடித இலக்கியம், நினைவோடை எனப் பல தள பயண சுவாரஸ்யம் அளிக்கும் தளம். தி.க.சி-க்கும், கி.ரா-வுக்கும் இடையே நிகழும் கடிதப் போக்குவரத்துகள் இருவருக்கும் இடையிலான நட்பு உணர்வின் அடர்த்தியை எடுத்துச் சொல்கிறது!
துவந்த யுத்தம் இயக்கம்: அசோக் குமார்

'நாப்பத்தி அஞ்சு நாள் மீன்களின் இனப் பெருக்கத்துக்காகக் கடலுக்கு மீன் பிடிக்கப் போகக் கூடாதுனு சொல்றீங்களே... அந்த அக்கறை எங்க உயிர் மேல இல்லையா?’ என்று மீனவர்கள் சார்பாகக் கேள்வி கேட்கும் குறும்படம். ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் மத்திய அமைச்சரைக் கடத்த மீனவர்கள் மூவர் முடிவு செய்கிறார்கள். அதன் தொடர் சம்பவங்கள் சுளீர் உண்மை நிலவரத்தைக் குறிக்கும் முடிவில் நிலைகொள்கிறது. மீனவர்களின் துயரங்களை உணரும்போது, அவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் ஏற்படுவது நிஜம்!
வேலாயுதம் இசை: விஜய் ஆண்டனி
வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

99

ஓப்பனிங் பில்ட்-அப் பாடல்தான். ஆனால், இதுவரையிலான படங்களில் இல்லாத மென்மை தொனி 'ரத்தத்தின் ரத்தமே’ பாடலில்! 'முளைச்சு மூணு இலையே விடலை’ பாடலில் வெண்டை, அவரை, மாம்பிஞ்சு, மொளகாய் என்று கனிந்த காய்த் தோட்டமாக ஹீரோயினை வர்ணித்து இருக்கிறார் கவிஞர் விவேகா. சமையல் வாசம் கிளர்ந்து பசியைத் தூண்டுகிறது. கவிஞர் அண்ணாமலையின் கும்மாங்குத்து வரிகளுக்கு 'சில்லாக்ஸ்’ பாடலில் மெலடி தொனி கொடுக்க முயற்சித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. மற்றும் ஒரு பாடலான 'மாயம் செய்தாயோ’வில் சங்கீதா ராஜேஸ்வரனின் குரல் மட்டும் சுகம். 'சொன்னா புரியாது’ பாடலை அதிரவைக்கும் வாத்தியங்கள் மட்டுமே ஆக்ரமிக்கின்றன. தீம் ஸாங் என்று கணிக்க முடியாத மியூஸிக் பிட் 'வேலா வேலா’!