
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் பயிற்சி முகாம் 2016-17


இதோ புதிய படை புறப்பட்டுவிட்டது!
2016-17-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் படை இந்த வாரத்தில் இருந்து கிளம்பிவிட்டது. பல்வேறு தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 22, 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
ஆனந்த விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், மாணவர்களுக்கான நெறிமுறைகளையும் வழிமுறைகளையும் சொல்லி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன், திரைப்பட இயக்குநர்கள் விஜய் மில்டன், ராஜுமுருகன், பத்திரிகையாளர் மீரா, ‘நீயா நானா’ கோபிநாத், ‘புதிய தலைமுறை’ கார்த்திகைச் செல்வன், உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா, திரைப்பட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன், பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், சூழலியலாளர் நக்கீரன், நிதி ஆலோசகர் நாகப்பன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தங்களது அனுபவங்கள் மூலமாகப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். தடையின்றித் தமிழ் எழுதுவதற்கான பயிற்சியை கவிஞர் மகுடேசுவரன் வழங்கினார். ‘கபாலி’ திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் மாணவர்கள்.


‘எழுத்தே அழகு... அழகே எழுத்து’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியபோது, ‘‘ஒரு நகைச்சுவைத் துணுக்காகக் கைதுசெய்யப்பட்டவர் ஆனந்த விகடனின் அதிபர்் பாலசுப்ரமணியன். அவருக்காக இந்திய பத்திரிகைகள் எல்லாம் ஆதரவாய் எழுதிக்கொண்டிருந்தன. இதற்கு முன்பும் இதுபோல சம்பவங்கள் நடந்திருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம், ‘இனி இப்படிச் செய்யமாட்டோம்’ என்று சொல்லி ஜாமீன் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், பாலசுப்ரமணியன் என்ன செய்தார் தெரியுமா? ‘நான் என்ன செய்தேனோ, அதை விரும்பித்தான் செய்தேன். சமூக அவலத்தை நகைச்சுவையாய் வெளியிட்டேன். இதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். அப்படி நீங்கள் எல்லாம் எளிமையாகவும், அதே சமயம் உங்கள் கருத்துக்களில் உறுதியாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய லட்சியமும் எண்ணமும் சரியாக இருந்து அதை எழுத்துகளில் வெளிப்படுத்த முடியுமானால், உங்கள் எழுத்துகள் நிச்சயம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்று குறிப்பிட்டார்.
‘சமூகத்தைப் படி’ என்கிற தலைப்பில் மாணவர்களோடு உரையாடினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். ‘‘என்னைப் பார்த்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘சுடுகாட்டில் படுத்து உறங்கினீர்களே... உங்களுக்கு ஆவிகள் மீது பயம் இல்லையா?’ என்றார்கள். நான் சொல்லும் பதில், சுடுகாட்டைவிட எனக்கு சுதந்திர நாட்டில்தான் பயம் அதிகமாக இருக்கிறது. ஆவிகளைவிடவும் இந்த நாட்டின் வளங்களைச் சுரண்டும் பாவிகள்தான் மோசமானவர்கள்’. அப்படி இருக்கிறது நமது நாட்டின் நிலை.
உங்கள் ஊர், மதம், சாதி ஆகியவற்றை விடுத்து நீங்கள் சமூகத்தை நேசிக்க ஆரம்பிக்கும்போது, எல்லா மக்களும் உங்களுக்கு உறவாகிவிடுவார்கள். மிக முக்கியமாக நிர்வாக அமைப்புகளையும், சட்டங்களையும் தெரிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவும். நீதியையும், சட்டங்களையும் விட மேலானது உங்களின் மனசாட்சி. உங்களுக்கு அதிகாரம் இருந்தால், அதை எளியவர்களுக்காகப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் பேனா அவர்களுக்காக எழுதட்டும்” என்று கட்டளையிட்டார்.

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு தலைசிறந்த தகுதியுடன் தேறிய (Out Standing) தா.நந்திதா, ஜெ.விக்னேஷ், கோ.இராகவிஜயா, ச.ஆனந்தப்பிரியா, மா.பி.சித்தார்த், மு.சித்தார்த், மு.பிரதீப் கிருஷ்ணா, பா.அபிரக்ஷன், பா.நரேஷ் ஆகியோருக்கும் மிகச் சிறப்பு, சிறப்புத் தகுதி, முதல் வகுப்பு ஆகிய தகுதிகள் பெற்ற மாணவ மாணவியருக்கும் விகடன் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார். கோ.இராகவிஜயா டெல்லி சென்றுவிட்டதால் அவரது சார்பில் விருதைப் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். விகடன் வாசகர் பா.சத்திய நாராயணன் சிறந்த மாணவர்களுக்கு பேனா பரிசளித்தார்.
சமூகத்தில் புதிய சிந்தனையோடு, எழுத்துகளால் மாற்றத்தை விதைக்க வந்திருக்கும் புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்போம்!
- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.சரவணகுமார்