
முகங்கள் - கங்கா பரணி

ஆங்கில நாவலாசிரியர், ப்ளாக் எழுத்தாளர், குறும்பட இயக்குநர் எனப் பல தளங்களில் இயங்கும் இளம் பெண் படைப்பாளி கங்கா பரணி. `பெஸ்ட் அர்பன் சென்னை ப்ளாக்கர்’ விருது இவருடைய ப்ளாக்குக்குக் கிடைத்தது. 2013-ல், இவர் இயக்கிய ‘டைனி ஸ்டெப்’ குறும்படத்துக்கு, வீ கேர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ‘பெஸ்ட் ஃபிலிம்’ விருது தந்து கெளரவித்தது. அதே நிகழ்வில், ‘ஸ்பெஷல் மென்ஷன்’ என்ற பிரிவில் இவர் இயக்கிய `கேண்டில்ஸ்’ குறும்படமும் விருது பெற்றது. ‘Just you me and a secret’, ‘A minute to death’, ‘A sip of love and a sip of coffee’ போன்றவை இவர் எழுதிய ஆங்கில நாவல்கள். அவரைச் சந்தித்தோம்.
‘‘உங்கள் பயணம் பற்றி?’’
‘‘எங்கள் வீட்டில் ஆங்கில நாளிதழ்கள் வாங்குவோம். அதில், வாசகர் பங்களிப்புப் பகுதிக்கு எங்கள் அப்பா எழுதி அனுப்பச் சொல்வார். இப்படி நான் அனுப்பியதில் ஒன்று பிரசுரமானது. அன்று ஆரம்பித்ததுதான் என்னுடைய எழுத்துப் பயணம். பத்திரிகைக்கு அனுப்பப்படும் படைப்புகள் தேர்வு செய்யப்படாதபட்சத்தில், அதை என் ப்ளாக்கில் போட்டுவிடுவேன். அதன்பிறகுதான் ப்ளாக்கில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஆரம்பித்ததால், 10-க்கும் மேற்பட்ட தமிழ் குறும்படங்கள், அனிமேஷன் படங்களை இயக்கியுள்ளேன்.’’
‘‘பெரும்பாலும் தமிழ் வாசகர்கள் இருக்கும் இடத்தில் ஆங்கில நாவல்கள் எழுதக் காரணம்?’’

‘‘பள்ளியில் படிக்கும்போதே முதல் மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாவது மொழியாக இந்தியையும் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது. என்னுடைய நாவல்களைப் படிக்க அடிப்படை ஆங்கிலம் இருந்தால் போதும். எளிமையாகப் புரிந்துவிடும். ஒரு திரைக்கதை மாதிரிதான் இருக்கும். வாசகர்களுக்கு ஒரு படம் பார்த்த திருப்தி வரவேண்டும் என்பதற்காக என்னுடைய நாவல்களைத் திரைக்கதை போன்றே எழுதியிருக்கிறேன்.’’
‘‘சந்தித்த சிக்கல்கள்?’’
‘‘என் நாவல்கள் அனைத்தும் காதல் தளம் சார்ந்தது. நான் எழுத ஆரம்பித்தபோது, ‘இந்தப் பொண்ணு யாரையோ லவ் பண்ணுது. அதனால்தான் இப்படி எழுதுது’ என என்னைப்பற்றி வாசகர்களே ஒரு முடிவு செய்து பேசினார்கள். இது ஆரம்பத்தில் எல்லாப் பெண் எழுத்தாளர்களும் சந்திக்கும் சிக்கல். நிறைய விஷயங்கள் பற்றி ஆராய்ந்து எழுதுவது என் விருப்பம். அதற்குக் கால நேரம் பார்க்காமல் வெளியில் செல்ல வேண்டும். ஓர் ஆண் எழுத்தாளர் இதைச் சுலபமாகச் செய்ய முடியும். அதையே ஒரு பெண் செய்ய நினைக்கும்போது பாதுகாப்பு என்கிற ஒரு கேள்வி எழுகிறது.’’
‘‘ஐ.டி-யில் வேலை பார்த்துக்கொண்டே எழுத்து, சினிமா எப்படிச் சத்தியமாகுது?’’

‘‘ஒரு நேரத்தில் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தபோதுதான் விழித்துக்கொண்டு இப்படி இயங்க ஆரம்பித்தேன். இதற்காக என் வேலையை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. என் பணி சார்ந்தும் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஐ.டி-யில் வேலை செய்யும் எல்லோரும் பெரும்பாலும் டென்ஷனுடன்தான் இருப்பார்கள். ஆனால், எனக்கு எந்த டென்ஷனும் கிடையாது. காரணம், நான் செய்யும் வேலை அனைத்தையும் மனதுக்குப் பிடித்தபடி செய்கிறேன்.’’
‘‘அடுத்து என்ன?’’
‘‘தற்போது திரைக்கதை எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். ‘A minute to death’ என்கிற இரண்டாவது நாவலின் தொடர்ச்சியையும் எழுத இருக்கிறேன்.’’
‘‘இளம்தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?’’
‘‘பெற்றோர்கள், குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் எனச் சொல்லும்போது அதைத் தவிர்க்காமல் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சி, உங்களுக்கு ஒருநாள் பெரிய அளவில் உதவும்.’’
- கே.அபிநயா