மதுரையில், கருவுறாத பெண்ணுக்கு 10 மாதமாக சிகிச்சை அளித்து சர்ச்சை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார் .
மதுரை விரகனூர் கோழிமேட்டைச் சேர்ந்தவர்கள் நவநீத கிருஷ்ணன் - யாஸ்மின் தம்பதியினர்.யாஸ்மின், கடந்த 10 மாத காலமாக கர்ப்பிணி என அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்துள்ளார். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கர்ப்பம் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக்கல்லூரி இயக்குநர் ஆகியோர் 4வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து, இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். "யாஸ்மின் மூன்று குழந்தை பெற்ற பின், கடந்த 2013-ம் ஆண்டு குடும்பநல அறுவைசிகிச்சை செய்துள்ளார் என்பது தெளிவானது. கர்ப்பம் என அவர் பதிவுசெய்ய வந்தபோது, தனியார் மருத்துவமனையில் கர்ப்பம் என உறுதிசெய்யப்பட்ட யூ.பி.டி strips உடன் கொண்டுவந்துள்ளார் . அதன் அடிப்படையில், கிராம சுகாதார செவிலியர் கர்ப்பிணி எனப் பதிவுசெய்துள்ளனர். இது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டபோது, யாஸ்மின் குழந்தை இல்லை என்று கூறி சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற நோயாளியாகத்தான் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஸ்கேன் பரிசோதனைக்கு அவரை உள் நோயாளியாக அனுமதிக்கபட்டபோது, 2முறை நழுவிச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் பல தவறான தகவல்களைக் கொடுத்தும் பரிசோதனைக்கு வராமல் தன்னை கர்ப்பிணி எனக் கூறிவந்துள்ளார். இந்தச் சம்பவம், ராஜாஜி மருத்துவமனை பெயரைக் கலங்கப்படுத்தும் வகையில் பொய்யான ஆவணங்களைக்கொண்டு தவறான தகவல்களை கூறிவருகிறார். விசாரணை முடிவில் அந்தப் பெண்ணின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார் .